தலையணைக்கு கீழே சார்ஜ் போட்ட ஸ்மார்ட் போன் தீப்பிடித்தது... 13 வயது சிறுமி உயிர் தப்பினார்!
நியூயார்க்: அமெரிக்காவில் தலையணைக்கு அடியில் வைத்து சார்ஜ் போடப்பட்டிருந்த ஸ்மார்ட் போன் எரிந்து தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 13 வயது சிறுமி உயிர் பிழைத்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரின் வடக்குப் பகுதியில் வசித்துவரும் 13 வயதுப் பெண் ஒருவர் தனது சாம்சங் கேலக்சி எஸ்4 ஸ்மார்ட்போனை சார்ஜரில் போட்டு தன்னுடைய தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு தூங்கியுள்ளார்.
இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, திடீரென கருகிய வாசனையை உணர்ந்துள்ளார் அச்சிறுமி. உடனடியாக எழுந்து தனது போனை எடுக்க முயற்சித்த அப்பெண் அதிர்ச்சியடைந்தார். அங்கே, அவரது போன் வெப்பத்தில் உருகி சிதைந்து கிடந்துள்ளது. அத்துடன் அவள் படுத்திருந்த தலையணையும், மெத்தை விரிப்பும் கருகி இருந்தது.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறும்போது, ‘போனின் பேட்டரி அதிக வெப்பமடைந்ததால் இந்த தீ விபத்து நேர்ந்திருக்கக்கூடும்' எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சாம்சங் நிறுவனத்தினர் அளித்துள்ள விளக்கத்தில், ‘அந்த பெண் உபயோகித்து வந்த இரண்டாம் தர பேட்டரியே இந்த விபத்திற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும்' என்று கூறியுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் சேதமடைந்த ஸ்மார்ட்போன், தலையணை, மெத்தை விரிப்பு ஆகிய அனைத்தையும் மாற்றித் தருவதாகவும் உறுதி அளித்துள்ள சாம்சங் நிறுவனம், தங்களின் தயாரிப்பு தரம் மற்றும் வாடிக்கையாளரின் பாதுகாப்பிற்கு தாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளது.
இத்தகைய போன்களைப் பயன்படுத்தும்போது தேவையான காற்றோட்டம் அளிக்கப்பட வேண்டும் என்பதுவும், படுக்கை போன்ற பொருட்களால் இவை மூடப்பட்டிருக்ககூடாது என்பதுவும் பயனர் கையேடுகளிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இதனை பலர் படிக்காமலேயே போன்களைப் பயன்படுத்துவதே இத்தகைய விபத்துக்களுக்கு முக்கியக் காரணம் எனவும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.












Click it and Unblock the Notifications