டிரம்பிற்கு புதிய தலைவலி.. சுலைமானி படுகொலை வழக்கில் டிரம்ப்பிற்கு பிடிவாரண்ட்
தெஹ்ரான்: ஈரான் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் அதிபர் டிரம்பிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது ஈராக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி, கடந்தாண்டு ஜனவரி மாதம் ஈராக் நாட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையம் அருகே அமெரிக்கா ராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார்.

இதற்குப் பதிலடியாக ஈரான் ராணுவமும் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பல அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் ஐஸ் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராட ஈராக் அரசால் உருவாக்கப்பட்ட பாதுகாப்புப் படையின் துணை தலைவர் அபு மஹ்தி அல் முஹந்திஸ் என்பவரும் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அபு மஹ்தி அல் முஹந்திஸ் கொல்லப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஈராக் உச்ச நீதிமன்றத்தில் அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இன்று நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஈராக் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் டிரம்பிற்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்க முடியும்.
டிரம்பை கைது செய்து ஈராக் நாட்டிற்கு நாடு கடத்துவது நடைபெற்ற வாய்ப்பே இல்லை என்றாலும்கூட, அதிபராகத் தனது கடைசி நாட்களில் இருக்கும் டிரம்பின் மீது ஈராக் எவ்வளவு கோபத்தில் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே இது உள்ளது.
முன்னதாக, ஈரான் அரசும் அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 30 பேர் மீது கொலை மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஆகிய குற்றச்சாட்டுகளை முன் வைத்து, பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. மேலும் அப்போதே ஈரான் டிரம்ப்பின் அதிபர் பதவிக் காலம் முடிவடைந்த பின்னரும் அவர் மீதான வழக்கு நிச்சயம் தொடரும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications