தெற்கு சூடான் உள்நாட்டுப் போர்: முக்கிய எண்ணெய் வள நகரைக் கைப்பற்றியது புரட்சிப்படை
ஜூபா: தெற்கு சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், எண்ணெய் வளம் நிறைந்த முக்கிய நகரை புரட்சிப் படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் தலைநகரில் கடந்த ஞாயிறன்று இரவு திடீரென கலகம் ஏற்பட்டது. முன்னாள் துணை அதிபர் ரிக் மச்சரின் ஆதரவு ராணுவ வீரர்கள் நாடு முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

அதிபர் சால்வா கீருக்கு எதிராக நடந்த இந்த கலகம் 2 நாட்களில் முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ராணுவப் புரட்சியின் போது 400 முதல் 500 பேர் வரை பலியாகி இருப்பதாக ஐ.நா. அறிவித்துள்ளது.

புரட்சியில் ஈடுபட்டதாக முன்னாள் நிதி அமைச்சர் கோஸ்டி மானிப், முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஜான் லக் ஜோக், முன்னாள் உள்துறை அமைச்சர் ஜியர் சங் அலங் உள்பட 10 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் ஜுபாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவ புரட்சியின் விளைவாக சுமார் 20 ஆயிரம் பேர் ஜுபாவில் உள்ள ஐ.நா.வளாகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். முன்னாள் துணை அதிபர் ரிக் மச்சரின் ஆதரவு கலகக்காரர்கள் தலைநகர் ஜுபாவிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள ஜாங்லீ மாநிலத்தின் தலைநகரான போர் நகரத்தை ஏற்கனவே கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது எண்ணெய் வளம் மிகுந்த யூனிடி மாகாண தலைநகர் பென்துயூவை புரட்சிப்படையினர் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

இந்த நகர் கைநழுவியதை தெற்கு சூடான் அரசும் ஒப்புக்கொண்டது. இதுபற்றி தகவல் தொடர்பு மந்திரி மிக்கேல் மகுயில் கூறுகையில், ‘இந்த மாகாணத்தின் ராணுவ டிவிஷனல் கமாண்டர் (தளபதி) ஜான் கோயாங் அணி மாறி புரட்சிப்படைக்கு சென்று விட்டார்' என தெரிவித்துள்ளார்.
ஆனபோதும், எண்ணெய் வளமுள்ள பகுதிகள் அரசின் பொறுப்பில் இருப்பதாக தலைநகர் ஜூபியில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் உலக நாடுகள் பல கவலை அடைந்துள்ளன. இரு தரப்பினரும் சண்டையை நிறுத்த கோரிக்கை விடுக்கப் பட்டு வரும் வேளையில், கூடுதல் அமைதிப்படை தெற்கு சூடானுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications