இலங்கை சிறையில் தமிழ் கைதிகளின் உண்ணாவிரதம் வாபஸ்
கொழும்பு: இலங்கையில் நீண்ட நாட்களாக சிறையில் அடைத்து வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
முன்னாள் விடுதலைப்புலிகள் 13 பேர் தங்களை நீண்ட காலமாக சிறையில் வைக்கப்பட்டிருப்பதை கண்டித்து கடந்த மாதம் 23-ம் தேதி முதல் உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினர். தங்கள் மீதான வழக்குகளின் விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததால் 4 பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிறைத்துறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்னாள் புலிகள் மீதான விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு துறை அமைச்சர் ஸ்வாமிநாதன் உறுதி அளித்தார். இதையடுத்து கைதிகள் 13 பேரும் தாங்கள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.
கொழும்பின் வடக்கு யாழ்ப்பாணம் தீபகற்ப பகுதியை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல ஆண்டுகளாக போராடிய விடுதலை புலிகள் அமைப்பினரை இலங்கை ராணுவம் போரில் வீழ்த்தியதை அடுத்து, வழக்கு விசாரணை இன்றி கடந்த 2009ம் ஆண்டில் இருந்து நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications