ஜனாதிபதி தேர்தல்: டிவி விவாதத்தில் சரமாரியாக அடித்துக் கொண்ட இலங்கை மலையக தமிழ் எம்பிக்கள்!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விவாதத்தில் இலங்கை மலையகத் தமிழ் எம்பிக்களான வேலுகுமார், திகாம்பரம் ஆகியோர் சரமாரியாக அடித்துக் கொண்டு மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை மலையகத் தமிழரின் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்கேவை வேலுகுமார் ஆதரித்ததால் டிவி விவாதத்தில் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, சஜித் பிரேமதாச, அனுர குமார திசநாயக்க, நாமல் ராஜபக்சே, அரியநேந்திரன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். ஈழத் தமிழரின் 7 கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக அரியநேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். மலையகத் தமிழரான இந்திய வம்சாவளித் தமிழர்களின் தமிழ் முற்போக்குக் கூட்டணி சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என முடிவெடுத்திருந்தது.

இந்த நிலையில் டிவி விவாதம் ஒன்றில் மலையகத் தமிழ் எம்பிகள் வேலுகுமார், திகாம்பரம் இருவரும் பங்கேற்றனர். தமிழ் முற்ற்போக்குக் கூட்டணியின் முடிவை மீறி வேலுகுமார், ரணில் விக்கிரமசிங்கேவுக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தார். டிவி விவாதத்தின் போது வேலுகுமாரின் முடிவை திகாம்பரம் கடுமையாக விமர்சித்தார்.
இந்த விவாதத்தில் வேலுகுமாரும் திகாம்பரமும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினர். ஒருவரை ஒருவர் துரோகி என விமர்சித்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் அடைமொழிகளால் கேலி செய்தனர். இதனால் டிவி விவாதம் அனல் பறந்தது.
ஒரு கட்டத்தில் வேலுகுமாரும் திகாம்பரமும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மலையகத் தமிழ் எம்பிக்களின் இந்த மோதல் அப்படியே டிவியில் லைவ்வாகவும் ஒளிபரப்பானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இருவரையும் டிவி விவாத நிகழ்ச்சி நெறியாளர் சமாதானப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்தும் இருதரப்பு ஆதரவு தலைவர்களும் யார் செய்தது தவறு? என அடுத்த விவாதத்தில் களமிறங்கி உள்ளனர். இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழ் எம்பிக்கள் பகிரங்கமாக டிவி நிகழ்ச்சியில் மோதிக் கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications