தாய்லாந்தில் கடுமையான நிலநடுக்கம் – ஒருவர் பலி, 75க்கும் மேற்பட்டோர் படுகாயம்
பாங்காக்: தாய்லாந்தில் சியாங்ராய், சியாங்மய் ஆகிய மாகாணங்களில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.
அதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். நிலநடுக்கம் காரணமாக பல வீடுகள் கட்டிடங்கள் மற்றும் கோவில்கள் சேதம் அடைந்தன.

பல இடங்களில் ரோடுகளில் விரிசல் ஏற்பட்டது. சியாங்ராய் மாகாணத்தில் சயங்லிங்காம் என்ற இடத்தில் வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளில் சிக்கி 83 வயது பெண் பலியானார். 75 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு 6.3 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சிறிய அளவில் 50 தடவை பூமி அதிர்ந்தது. இதனால் பீதியில் உறைந்த மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினார்கள். இதனால் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.












Click it and Unblock the Notifications