வெடிபொருள் பீதி: தற்காலிகமாக மூடப்பட்ட லண்டன் விமானநிலையம் சோதனைக்குப் பின் திறப்பு
லண்டன்: லண்டன் அருகே விமானநிலையம் ஒன்றில் மர்மபார்சலில் வெடிபொருள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்பான முறையில் அந்த வெடிபொருள் செயலிழக்கம் செய்யப் பட்டதால் பெருத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
லண்டன் அருகே பெட்போர்ட்சைர் என்ற இடத்தில் உள்ளது லுடா என்ற விமான நிலையம். பெரும்பாலும், சிரிய ரக விமானங்களே வந்து செல்லும் இந்த விமான நிலையத்தில் நேற்று சந்தேகத்திற்கிடமான வகையில் பார்சல் ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது.

அந்தப் பார்சலில் வெடிகுண்டு இருக்கலாம் எனப் பரவிய தகவலால் விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமான நிலையத்தின் உள்ளே இருந்த சுமார் 1600 பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்.
மேலும் விமான நிலையத்துக்கு வரும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன. இதனால் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.
விமானநிலையத்தில் நிலவிய பீதி காரணமாக அங்கு தரையிறங்க வேண்டிய 6 விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு மாற்றி விடப்பட்டன. மேலும், 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர சேவை குழுவினர் மற்றும் ராணுவ வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் இந்த மர்ம பார்சலை எடுத்து சென்று அதை வெடிக்க செய்து செயல் இழக்க வைத்தனர்.
பின்னர், அங்கு பரபரப்பும், பீதியும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தின் காரணமாக பல மணி நேரம் மூடப்பட்ட விமான நிலையம், பலத்த சோதனைக்கு பின் மீண்டும் மாலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.
உரிய நேரத்தில் வெடிபொருள் கண்டுபிடிக்கப் பட்டதால் பலத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சதிச் செயலுக்குக் காரணமானவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications