பெலராஸ் பெண் பத்திரிகையாளர் ஸ்வெத்லானாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு
ஆஸ்லோ: பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஸ்வெத்லானா அலெக்ஸிவிச்சுக்கு 2015ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
இலக்கிய நோபல் பரிசைப் பெறும் 14வது பெண் அலெக்ஸிவிச் ஆவார். கடைசியாக 2013ல் பெண் ஒருவருக்கு இலக்கிய நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இலக்கியப் பரிசுக் கமிட்டியின் தலைவரான சாரா டேணியஸ் கூறுகையில், துயரப்படுவோருக்காக தனது எழுத்துக்களைப் பயன்படுத்தியவர் ஸ்வெத்லானா என்று பாராட்டியுள்ளார்.
1901ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு நிறுவப்பட்டது. அது முதல் இதுவரை 13 பெண்கள் இந்தப் பரிசைப் பெற்றுள்ளனர். தற்போது 14வது நபராக ஸ்வெத்லானா இப்பரிசைப் பெறுகிறார்.
கடைசியாக கனடாவைச் சேர்ந்த ஆலிஸ் முன்ரோ 2013ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1948ம் ஆண்டு மே 31ம் தேதி உக்ரைனில் உள்ள இவனோ -பிரான்கோவ்ஸ்க் நகரில் பிறந்தார் ஸ்வெத்லானா. இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றஇயவர். தந்தை பெலாரஷ்யன், தாயார் உக்ரைன். சிறு வயதிலேயே பத்திரிகையாளராக வேண்டும் என்பது ஸ்வெத்லானாவின் கனவாகும். பெலாரஸில் தனது குடும்பத்துடன் செட்டிலான பின்னர் இவர் பத்திரிகையாளராக மாறினார்.
சிறுகதைகள், கட்டுரைகள், செய்தி ஆய்வுக் கட்டுரைகள் என பலதும் எழுதியுள்ளார். கடந்த 40 வருடங்களாக எழுதி வருகிறார் ஸ்வெத்லானா. சோவியத் காலத்திலும், அதன் பின்னரும் நடந்த நிகழ்வுகளை எழுத்து வடிவத்தில் ஆவணப்படுத்தியுள்ளார்.
தான் சந்தித்த மக்களின் துயரங்கள், சிரமங்கள், இயலாமைகள் என பலவித உணர்ச்சிகளை மையப்படுத்தி எழுதுபவர் ஸ்வெத்லானா. வலி மிகுந்த உலகை வெளியுலகுக்குக் காட்டிய பெருமைக்குரியவர். சிதறுண்டு போன மக்கள், குடும்பங்கள், சோவியத் நாடுகளை மையமாகக் கொண்டவை இவரது எழுத்துக்கள், படைப்புகள்.
செர்னோபில் கொடூரம் குறித்து இவர் எழுதியவை மிகவும் முக்கியமானவை. ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யா நடத்திய போர் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார்.
ஒரு திறமையான பத்திரிகையாளராக மட்டுமல்லாமல் தலை சிறந்த எழுத்தாளர் என்ற முகத்தையும் கொண்டிருப்பவர் ஸ்வெத்லானா.