சிட்னி ஹோட்டல் முற்றுகை: பிணையக்கைதிகள் மீட்கப்பட்டது எப்படி?
சிட்னி: ஆஸ்திரேலியாவில் பொது மக்கள் 17 பேரை பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் துப்பாக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
துப்பாக்கிச் சண்டையின் போது பிணைக்கைதிகள் 2 பேர் உயிரிழந்தனர். இந்தியர்கள் 2 பேர் உட்பட மற்ற பிணைக் கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

என்ன நடந்தது?
காலை 9.45 மணியளவில் துப்பாக்கி ஏந்திய நபர் லிண்ட் உணவகத்தில் நுழைந்து அங்கிருந்த மக்களை பிணைக் கைதிகளாக பிடித்தார். இதனை அடுத்து அந்த பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். சிட்னியில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

தப்பிய கைதிகள்:
துப்பாக்கி வைத்திருந்தவருடன் தொடர்பு கொள்ள காவல்துறையினர் முயற்சி செய்து வந்தனர். இந்நிலையில், 5 மணி நேரத்திற்கு பிறகு அவசர காலத்தின் போது வெளியேறும் வழியாக உணவகத்தில் இருந்து 3 பிணைக் கைதிகள் தப்பினர். சில நிமிடங்களில் 2 பெண்கள் உணவகத்தில் இருந்து தப்பி வந்தனர்.

துப்பாக்கிச் சூடு:
நள்ளிரவு ஒன்றே கால் மணியளவில் உணவகத்தின் உள்ளே துப்பாக்கியால் சுடப்படும் சத்தம் தொடர்ந்து கேட்கிறது. அடுத்த 30 விநாடிகளில் துப்பாக்கிச்சூடு அடங்கி விடுகிறது.

காவல்துறையினர் அதிரடி:
அதனைத் தொடர்ந்து எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. அடுத்த சில நிமிடங்களில், பிணைக் கைதியாக சிக்கிக் கொண்ட வயதான பெண்மணியை காவல்துறையினர் வெளியே அழைத்து வருகின்றனர்.

அதிரடி தாக்குதல்:
நள்ளிரவு ஒரு மணி 18 நிமிடத்தின் போது மேலும் ஒரு பெண் பிணையக் கைதியை அதிகாரிகள் வெளியே அழைத்து வருகின்றனர். அடுத்த நிமிடத்தில், 7 காவல்துறை அதிகாரிகள், குண்டு துளைக்காத கவச உடைகளுடன், லிண்ட் உணவகத்திற்குள் அதிரடியாக நுழைகின்றனர்.

மூன்று பேர் உயிரிழப்பு:
ஓரிரு நிமிடங்கள் கழித்து மூன்று பேரின் உடல்கள் வெளியே கொண்டு வரப்படுகின்றன. நள்ளிரவு ஒன்றே முக்கால் மணியளவில் பிணைக் கைதிகளை மீட்கும் பணி முழுமையாக முடிந்து விட்டதாக ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.












Click it and Unblock the Notifications