போரில் சிக்கி மீண்டு உயிரோடு வந்த சிரியா சிறுவன்... பரபரப்புத் தகவல்கள்
சிரியா நாட்டில் நடக்கும் உள்நாட்டுப்போரில் சிக்கி சிறுவன் ஒருவன் உயிரோடு திரும்ப மீண்டு வந்துள்ளது உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சி நிறைந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டமாஸ்கஸ்: சிரியா உள்நாட்டுப் போரின் கொடூரத்தை உணர்த்தும் சாட்சியாகக் கடந்த ஆண்டில் வைரலாக பரவிய புகைப்படத்தில் தோன்றிய சிறுவன் மீண்டும் உயிரோடு வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் பல ஆண்டுகளாக நிலவும் உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் காரணமாக, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள், அகதிகளாக ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் தஞ்சம் அடைந்துவருகின்றனர். இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் ஒவ்வொரு நாளையும் திகிலோடு கடத்திவருகிறார்கள்.
இதற்காக, பலர் ஆபத்தான சாகசங்கள் நிறைந்த பயணங்களை, மத்திய தரைக்கடல் வழியாக மேற்கொள்கின்றனர். அந்த பயணத்தின்போது, பலர் உயிரிழப்பதும் வழக்கமாக உள்ளது. ஆனாலும் சிரியா மக்கள் அதைத் தொடருகிறார்கள்.
இந்நிலையில், சிரியா நாட்டில் நிகழும் உக்கிரமான போரின் அவலத்தை உணர்த்தும் வகையில், சிறுவன் ஒருவன் உடல் முழுவதும் புகை, மற்றும் ரத்தம் வழிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் கடந்தாண்டில் ஊடகங்களில் வெளியாகியது. இந்த புகைப்படம், சிரிய உள்நாட்டுப் போரின் அவலத்தை, உலக அளவில் எடுத்துரைப்பதாக அமைந்தது என்பதால் பலரும் அந்த சிறுவனை மறந்திருக்க வாய்ப்பில்லை.
காயத்தோடு போட்டோவில் இருந்த சிறுவனின் பெயர், ஓம்ரான் தக்னீஷ். அவன், சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள அவனது வீட்டில் இருந்தபோது, சிரிய படைகளின் குண்டுவீச்சில் பாதிக்கப்பட்டதாகவும், தெரியவந்தது.
இந்நிலையில், அந்த சிறுவன் வெளிநாட்டு தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி அளித்துள்ளான். சிரியாவில் தொடர்ந்து வசித்து வருவதாகவும், சிரிய அரசின் கொடூர முகத்தை உலகிற்கு உணர்த்த முயற்சிப்பதாகவும் அந்த பேட்டியில் சிறுவன் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
சிறுவனின் தந்தையும் இதே கருத்தை முன்வைத்துள்ளார். சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு குழப்பத்தை தீர்க்க, சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என்றும் அவர் ஊடகங்களில் வலியுறுத்தியுள்ளார்.