எம்.பிக்களை சிறை பிடியுங்கள்.. போராட்டக்காரர்களுக்கு பாக். மத குரு உத்தரவு!
இஸ்லாமாபாத்: பிரதமர் நவாஸ் ஷெரீப் ராஜினாமா செய்யும் வரை நாம் ஓயக் கூடாது. அவருக்கு நெருக்கடி தருவதற்காக, கையில் கிடைக்கும் எம்.பிக்களையெல்லாம் சிறை பிடியுங்கள் என்று இம்ரான் கானுடன் சேர்ந்து தலைநகர் இஸ்லாமாபாத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மத குரு முகம்மது தாஹிர் அல் குவாத்ரி தனது ஆதரவாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவரும் இம்ரான் கானும் சேர்ந்து தலைநகர் இஸ்லாமாபாத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றனர். நாடாளுமன்றத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கானோருடன் சேர்ந்து முற்றுகையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இருக்கும் எம்.பிக்களை வெளியேற விடாமல் சிறை பிடிக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு மத குரு உத்தரவிட்டுள்ளார்.
மாலைக்குள்...
இன்று மாலைக்குள் ஷெரீப் விலக வேண்டும் என்று இவர்கள் கெடு விதித்துள்ளனர். அப்படி இல்லாவிட்டால் ஷெரீப் வீட்டை முற்றுகையிடப் போவதாகவும் இவர்கள் எச்சரித்துள்ளனர்.
30,000 பேருடன்
நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கியக் கட்டடங்கள் அமைந்துள்ள பகுதியில் கிட்டத்தட்ட 30,000 பேருடன் இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சுதந்திரப் பேரணி
சுதந்திரப் பேரணி என்ற பெயரில் நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்களையும், குழந்தைகளையும் முன்வரிசையில் நிறுத்தி போராடி வருகின்றனர். இதனால் போலீஸாரும், ராணுவத்தினரும் நடவடிக்கை எடுக்க முடியாமல் போயுள்ளது.
கொசு கூட போகக் கூடாது
இந்த நிலையில் இன்று தனது ஆதரவாளர்களிடையே பேசிய குவாத்ரி, உள்ளே இருந்து யாரும் வெளியேறக் கூடாது. வெளியே இருந்து யாரும் போகக் கூடாது. ஒரு கொசு கூட நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற விடாதீர்கள்.
இங்கிலாந்து அதிருப்தி
இதற்கிடையே, பிரச்சினையை இரு தரப்பும் பேசித் தீர்க்குமாறு பிரதமர் ஷெரீப்பையும், இம்ரான் கானையும் இங்கிலாந்து அரசு கேட்டுக் கொண்டுள்ளது