துபாயில் கலக்கிய தமிழக மாணவர்கள்.. யுசிமாஸ் மனக்கணித போட்டியில் பரிசு மழை
துபாயில் நடைபெற்ற மனக்கணிதப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் பரிசுகளை தட்டிச் சென்றனர்.
துபாய்: துபாயில் நடந்த யுசிமாஸ் மனக்கணித போட்டியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று தமிழக மாணவர்கள் பரிசுகளை குவித்தனர்.
துபாயில் 21வது சர்வதேச மனக்கணித போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3000 பேர் கலந்து கொண்டனர். இதில் இந்தியாவில் இருந்து மட்டும் மொத்தம் 444 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் தமிழகத்தில் இருந்து யுசிமாஸ் மனக்கணித நிறுவனத்தின் அதிகாரி சென்னையைச் சேர்ந்த அப்ரார் அகமது தலைமையில் பத்து மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ள துபாய் சென்றனர்.

சர்வதேச மனக்கணித போட்டி பல்வேறு நிலைகளில் நடைபெற்றது. அதில், இ பிரிவில் நடைபெற்ற போட்டியில் செங்கல்பட்டைச் சேர்ந்த அக்சய் மற்றும் சாசங் குமார் இரண்டாம் பரிசையும், கவுதம் ராவ் மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரணவ் சந்தர் ஆகியோர் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
இதே போன்று ஜெ பிரிவில் நடைபெற்ற போட்டியில் வேலூர் சத்துவாச்சேரியைச் சேர்ந்த தீபன் மூன்றாம் பரிசை பெற்றார்.
சி பிரிவில் நடைபெற்ற போட்டியில் செங்கல்பட்டைச் சேர்ந்த ஸ்ரீநிதி இரண்டாம் பரிசையும், கொளத்தூரைச் சேர்ந்த திவ்யா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
ஜி பிரிவில் நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடியைச் சேர்ந்த தக்னேஷ்வர் பொற்கோ மாரியப்பன் மூன்றாம் பரிசை பெற்றார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
முன்னதாக, போட்டியினை யுசிமாஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டாக்டர் டினோ விங் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், துணைத் தூதர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications