தமிழர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி அமைதி வழி அறப்போர்.. இங்கிலாந்து வாழ் தமிழர்கள் முடிவு
இங்கிலாந்து வாழ் தமிழர்கள், இந்திய தூதரகம் முன் அமைதி வழி அறப்போரை முன்னெடுத்து இருக்கிறார்கள்.
Recommended Video
இங்கிலாந்து: வாழ் தமிழர்கள், இந்திய தூதரகம் முன் அமைதி வழி அறப்போரை முன்னெடுத்து இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தமிழர் உரிமை பல வழிகளில் பறிக்கப்படுகிறது.
மத்திய பாஜக அரசாங்கத்தை கண்டித்து மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை இங்கிலாந்து வாழ் தமிழர்கள் ஒருங்கிணைத்திருக்கிறார்கள். இதற்காக இங்கிலாந்து வாழ் தமிழர்கள், இந்திய தூதரகம் முன் அமைதி வழி அறப்போரை முன்னெடுத்து இருக்கிறார்கள்.
வரும் ஏப்ரல் 15 அன்று, ஞாயிற்று கிழமை காலை 11 மணிக்கு, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. சமூக நீதியை சவக்குழியில் தள்ளும் கட்டாய 'நீட்' தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. 'நீட்' சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றம் ஒருங்கிணைந்து இயற்றிய இரண்டு சட்ட மசோதாவை உடனடியாக நிறைவேற்ற உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அறப்போர் நடைபெறுகிறது.
மேலும் தமிழக விவசாய உரிமையான காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும்,
தமிழக விவசாய நிலங்களை பாலைவனங்களாக்கும் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரியும் தமிழர் ஒரு ரூபாய் வரி கொடுத்தால் 60 பைசாவை மத்திய அரசு கபளீகரம் செய்வதை கண்டித்தும் இந்த அறப்போர் நடைபெறவுள்ளது.
தமிழக எல்லைக்குள் விவசாய நிலங்களை அபகரித்து ஊடுருவி செல்லும் கெயில் குழாய் திட்டத்தை கைவிடக் கோரியும் காற்றில் நச்சை கலந்து தமிழரை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடவும் வலியுறுத்தப்படவுள்ளது. மேலும் தமிழ்நாட்டு இயற்கை வளத்தை பாதித்து, நீர் வளத்தை உறிஞ்சப் பார்க்கும் நியூட்ரினோ திட்டத்தை நிறுத்தக் கோரியும் இங்கிலாந்து வாழ் தமிழர்கள், இந்திய தூதரகம் முன் அமைதி வழி அறப்போரை முன்னெடுக்கவுள்ளனர்.
செம்மொழி தமிழை தொடர்ந்து ஆதிக்கம் செய்ய நினைக்கும் ஹிந்தித் திணிப்பை கண்டித்தும், சமத்துவ சமுதாயம் வாழ விழையும் தமிழர் மத்தியில் சமஸ்கிருத கலாச்சாரத்தை திணிப்பதை கண்டித்தும், தமிழ் நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழருக்கு முன் உரிமை வழங்கக் கோரியும் தமிழர் கடலில் கொல்லப்படும் மீனவர்களை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த அமைதிவழி அறப்போரில் வலியுறுத்தப்படவுள்ளது.
சாகர் மாலா திட்டத்தை எதிர்த்தும் தமிழர் கடலில் துறைமுகம் அமைத்து இயற்கை வளங்களை சூறையாட நினைப்பதை தடுக்க வலியுறுத்தியும் மீனவர் கிராமங்களை அப்புறப்படுத்த முனைவதை கண்டித்தும் தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் வழக்காட உரிமை கோரியும், தமிழ் நாட்டில் அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ் நாட்டில் போராடும் போராளிகளின் உணர்வுகளை உரிமைகளை மதிக்க, பாதுகாக்க வலியுறுத்தியும் இந்த அறப்போராட்டம் நடைபெறுகிறது.
தமிழக மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை பட்டியலிட்டு, அவற்றை தீர்க்க வலியுறுத்தி, ஒரு மனுவாக தோழர்கள் சிலர், மார்ச் மாதம் இறுதியில், இந்திய தூதரகத்திடம் வழங்கியபோது அவர்கள் அதை வாங்காமல் மறுத்து விட்டார்கள். இப்படி தமிழர் படும் எண்ணிலடங்கா இன்னல்களை போக்க ஒரு குரலில் ஓங்கி ஒலிக்க ஓர் இடத்தில் திரளுகின்றனர் தமிழர்கள். இந்த அறப்போரை தொடர்ந்து இந்திய பிரதமர் திரு.மோடி லண்டன் வருவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிற ஆர்ப்பாட்டமாக அமைகிறது.
இது வரை லண்டன் தமிழ் மக்கள், தமிழர் ஒருமைப்பாடு இயக்கம், பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம், தமிழர் முன்னேற்ற கழகம், உலக தமிழ் அமைப்பு, லண்டன் தமிழ் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் அறப்போரில் தங்களை இணைத்து ஆதரவை நல்கி இருக்கிறார்கள்.