விளையாட்டு வினையானது.. நண்பன் பலி.. போலீஸ் பயத்தில் சிறுவனும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
நண்பனைக் கொன்றதற்காக போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் அமெரிக்கச் சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
வாஷிங்டன் : அமெரிக்காவில் நண்பனை தவறுதலாக சுட்டுக் கொன்ற மாணவர், போலீசுக்கு பயந்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டாவின் புறநகர் பகுதி லாரன்சஸ்வில்லே. இங்கு வசித்து வந்த டெவின் ஹோட்ஜ் என்ற 15 வயது சிறுவனைச் சந்திக்க, புத்தாண்டு தினத்தன்று அவனது நண்பர்கள் மூன்று பேர் வந்திருந்தனர். நண்பர்களிடம் தனது வீட்டில் இருந்த துப்பாக்கியைக் காட்டியுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கியின் விசையை அழுத்தி விட்டான் டெவின்.

இதில் அவனது அருகில் அமர்ந்திருந்த சாத் கார்லெஸ் என்ற 17 வயது சிறுவனின் மீது குண்டு பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதைப் பார்த்து மற்ற நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த இடத்தை விட்டு எழுந்து ஓடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இப்படி ஒரு அசம்பாவிதம் நடைபெறும் என கொஞ்சமும் எதிர்பாராத டெவின், போலீஸ் வருவதைப் பார்த்து அஞ்சியுள்ளான். அவர்கள் வந்து தன்னை கைது செய்து தூக்கில் போட்டு விடுவார்கள் என எண்ணி, தன்னைத் தானே சுட்டு அவன் தற்கொலை செய்து கொண்டான்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications