கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.. பாகிஸ்தானை மறைமுகமாக எச்சரித்த ஈரான்.. என்ன நடந்தது?
தெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் மோதல் விவகாரத்தில் மூன்றாவது நாடு எதுவும் தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக ஈரான் எச்சரித்துள்ளது. டிரம்ப் - பாகிஸ்தான் ராணுவ தளபதி முனிர் சந்திப்பு நடைபெற்ற நிலை ஒரு சில தினங்களில், இத்தகைய எச்சரிக்கையை ஈரான் விடுத்துள்ளது.
இஸ்ரேலுடனான மோதலில் பிற நாடுகள் தலையிட வேண்டாம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் எல்லை மீறப்பட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை அண்மையில் சந்தித்தார்.

டிரம்புடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி சந்திப்பு
இந்த சந்திப்பை ஈரான் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஏனெனில் ஈரானுடனான நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் மிக முக்கிய நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது. இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்ததுடன் அந்த நாட்டுடனான நில எல்லையை பாகிஸ்தான் மூடியது. ஈரான் - இஸ்ரேல் மோதலில் இஸ்ரேல் பக்கம் அமெரிக்கா நிற்கிறது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானுக்கு எதிரான போரில் இறங்குவதா இல்லையா என்பது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. இரு வாரங்களில் இது குறித்து முடிவு செய்ய இருப்பதாக டிரம்ப் கூறினார். இத்தகைய சூழலில் டிரம்ப் உடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி சந்தித்து ஆலோசனை நடத்தியது மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. அமெரிக்காவில் ஜெனரல் ஆசிம் முனீர், டொனால்ட் டிரம்ப சந்தித்த சம்பவத்தை அடுத்து, ஈரான் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சரணடைய மாட்டோம் என்பது நிச்சயம்
டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தின் துணைத் தலைவர் ஜாவேத் ஹொசைனி இத்தகவலை தெரிவித்தார். ஜாவேத் ஹொசைனி கூறியதாவது:- "நாங்கள் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திட்டுள்ளோம், ஆனால் IAEA இஸ்ரேலின் விருப்பத்தின்படி செயல்படுகிறது. G7 எப்போதும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது. நிபந்தனையின்றி சரணடைய மாட்டோம் என்பது நிச்சயம்" என்றார்.
ஏதாவது ஒரு மூன்றாவது நாடு தலையிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஹொசைனி கூறினார். முன்னதாக, ஜெனரல் ஆசிம் முனீர், ஒரே மாதத்தில் இருவேறு நபர்களை சந்தித்தது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், ஈரானின் பக்கமா அல்லது அமெரிக்காவின் பக்கமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஜெனரல் முனீர், கடந்த மே மாதம் ஈரான் அதிபரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இஸ்ரேல் ஈரான் மோதல்
ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ராணுவ கட்டமைப்புகள், அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகளை வீசியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வருகின்றன. ஈரானின் ஏவுகணை கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
அதேபோல் இஸ்ரேலின் முக்கிய அறிவியல் மையத்தை தாக்கியதாக ஈரான் தெரிவித்தது. இஸ்ரேல்-ஈரான் இடை யேயான மோதல் இன்று 9-வது நாளாக நீடித்து வருகிறது. இரு தரப்பும் பரஸ்பரமாக ஏவுகணை, குண்டுகளை வீசின. இன்று அதிகாலை ஈரானும் இஸ்ரேலும் புதிய தாக்குதல்களை நடத்தின. ஈரானில் உள்ள ஏவுகணை சேமிப்பு மற்றும் ஏவுதளங்கள் மீது இஸ்ரேல் புதிய அலை தாக்குதல்களை நடத்தியது.












Click it and Unblock the Notifications