டெக்னாலஜியில் தீவிரவாதிகள் எங்கேயோ போய்ட்டாங்க.. நாம இன்னும் பழசாவே இருக்கிறோம்... மோடி
வாஷிங்டன்: தீவிரவாதிகள் 21வது நூற்றாண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகையில் நாம் இன்னும் பழங்கால முறையை பயன்படுத்துகிறோம் என அமெரிக்க அதிபர் ஒபாமா உலக தலைவர்களுக்கு அளித்த விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கிருந்து நேற்று அமெரிக்கா சென்றார். வாஷிங்டன் நகரில் நடக்கும் நான்காவது அணு சக்தி பாதுகாப்பு மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். இன்று நடக்கும் மாநாட்டில் அவர் உரை நிகழ்த்துகிறார்.
முன்னதாக மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று இரவு விருந்து அளித்தார். 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட அந்த விருந்தில் மோடி பேசுகையில்,
உலகம் முழுவதும் தீவிரவாதம் பரவியுள்ளது. ஆனால் நாம் நமது நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தான் நடவடிக்கை எடுக்கிறோம். அணு சக்தி பாதுகாப்பு அனைத்து நாடுகளின் முக்கிய விஷயமாக இருக்க வேண்டும்.
இன்று தீவிரவாதிகள் பயங்கர வன்முறை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். நாம் குகையில் வசிக்கும் மனிதரை தேடவில்லை. மாறாக கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போனுடன் நகரில் சுற்றும் தீவிரவாதியை தேடுகிறோம்.
தீவிரவாதிகள் 21வது நூற்றாண்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாம் பலங்கால முறையை பயன்படுத்தி அவர்களை தேடுகிறோம். அணு சக்தி பாதுகாப்பை பொறுத்த வரை ஒபாமா சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்றார்.
விருந்தில் மோடி ஒபாமாவுக்கு அருகில் அமர்ந்திருந்தார். அணு சக்தி மாநாட்டில் 53 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கிடையே மோடி கனடா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.