ஒரு வித்தியாச புத்தாண்டுப் பரிசு... டெக்சாஸில் வெளிப்படையாக துப்பாக்கி கொண்டு செல்ல அனுமதி!!
ஆஸ்டின்(யு.எஸ்) 2016 புத்தாண்டு முதல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வெளிப்படையாக கைத் துப்பாக்கி கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
முறைப்படி லைசென்ஸ் பெற்றவர்கள் கைத்துப்பாக்கியை பெல்டில் அல்லது தோளில் மாட்டப்பட்ட உறைகளில் வெளிப்படையாகத் தெரியும் வகையில் இனி அணிந்து செல்லலாம்.

இது வரையிலும் போலீசாருக்கு மட்டுமே இத்தகைய அனுமதி இருந்தது. மற்றவர்கள் நேற்று வரை, தங்களிடன் துப்பாக்கி இருக்கிறது என்பதை வெளிப்படையாக தெரியப்படுத்தக் கூடாது.
இனிமேல் சாலையில் கடந்து செல்லும் போது அல்லது கைத் துப்பாக்கி அனுமதிக்கப்பட்டுள்ள பொது இடங்களில் பலரும் இடுப்பில் துப்பாக்கியுடன் செல்வதைக் காணமுடியும்!
பொது மக்கள் இப்படி துப்பாக்கி கொண்டு செல்வதைப் பார்த்தால் ஒரு வகை பயம் வருவதை தவிர்க்க இயலாது.

துப்பாக்கிக்கு ஆதரவானவர்களோ, 'பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை. முழு பின்னணி விவரங்களை சரிபார்த்த பிறகே துப்பாக்கிஅனுமதி வழங்கப்படுகிறது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே துப்பாக்கியை உபயோகிக்க நேரிடும்.திருடர்களும் குற்றவாளிகளும் தான் பயப்பட வேண்டும். இந்த அனுமதியினால் குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது', என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய அனுமதி அமெரிக்காவில் புதிதல்ல. ஏற்கனவே 44 மாகாணங்களில் இந்த அனுமதி அமலில் உள்ளது.தற்போதைய நிலவரப்படி கலிஃபோர்னியா, இலனாய், நியூ யார்க், தெற்கு கரோலைனா, ஃப்ளோரிடா ஆகிய மாகாணங்களில் மட்டுமே வெளிப்படையாக துப்பாக்கி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
டெக்சாஸில் சுமார் 826 ஆயிரம் பேர்கள் லைசென்ஸ் பெற்று கைத் துப்பாக்கிகள் வைத்துள்ளனர். அத்தனை துப்பாக்கிகளும் இனி பொது இடங்களில் மக்கள் பார்வையில் தெரிய வாய்ப்புள்ளது.
அதேவேளையில், அலுவலகங்களிலும், அங்காடிகளிலும் இந்த அனுமதிக்கு விலக்கு கோரி அந்தந்த நிறுவனங்கள் விதிமுறைகளை அமல்படுத்த முடியும். பல்வேறு சில்லரை வர்த்தக நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் வளாகத்திற்குள் துப்பாக்கி அனுமதி கிடையாது என்று விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளன.
கல்லூரி வளாகங்களிலும் மறைத்து வைத்தோ, வெளிப்படையாகவோ துப்பாக்கி கொண்டு செல்ல அனுமதி கிடையாது.
அமெரிக்க இந்தியர்களின் விருப்ப தேசமான டெக்சாஸில் அமலாகியுள்ள இந்த புதிய ஆணை கொஞ்சம் கிலி ஏற்படுத்துவதாக தெரிந்தாலும், கவலைப்படத் தேவையில்லை என்றே பெரும்பாலோனோர் இணைய வெளியில் கருத்து தெரிவித்துள்ளனர்.
-தினகர்












Click it and Unblock the Notifications