ஹார்மூஸ் ஜலசந்தி அருகே.. இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பல் மீது தாக்குதல்.. 3 மாலுமிகளின் கதி என்ன?
தெஹ்ரான்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் உள்ள துறைமுகத்தில் இருந்து குஜராத்தில் உள்ள கண்ட்லா துறைமுகம் நோக்கி வந்த சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி அருகே நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 3 மாலுமிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் 12 வது நாளாக நீடித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. பதிலுக்கு ஈரானும் இடைவிடாமல் வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

தாய்லாந்து சரக்கு கப்பல் மீது தாக்குதல்
இரு தரப்புக்கும் இடையேயான இந்த மோதலால், மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்து இருப்பதால் கச்சா எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், தாய்லாந்துக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து குஜரத்தில் உள்ள கண்ட்லா துறைமுகம் நோக்கி வந்து கொண்டு இருந்த 'மயூரி நரீ' (Mayuree Naree) என்ற சரக்கு கப்பல்ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக சென்றபோது தாக்குதலுக்கு உள்ளானது.
3 மாலுமிகள் நிலைமை என்ன?
இந்த கப்பல் தாய்லாந்தைச் சேர்ந்த Precious Shipping Pcl நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு பல்க் கேரியர் கப்பல் ஆகும். கப்பலில் இருந்த 20 மாலுமிகள் மீட்கப்பட்ட நிலையில், 3 பேரின் நிலை தெரியவில்லை. இந்த தகவலை தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது. தாய்லாந்து கடற்படை வெளியிட்ட புகைப்படங்களில், கப்பலில் இருந்து கருமையான அடர்ந்த புகை எழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் கப்பலை சுற்றியுள்ள கடல் பகுதியில் உயிர் காப்பு படகுகள் மிதக்கும் காட்சியும் அடங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கான குறிப்பிட்ட காரணம் எதுவும் தெரியவில்லை எனவும், இதுவரை எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை எனவும் தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது. மாயமாகியுள்ள 3 மாலுமிகளை மீட்கும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா
சரக்கு கப்பலின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. மேலும், "வர்த்தக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்தியா கூறியுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "மார்ச் 11 அன்று ஹார்மூஸ் நீரிணையில் தாய்லாந்து கப்பல் 'மயூரி நரீ' மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து வந்துள்ள தகவல்களை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்.
இந்தியாவின் காந்த்லா துறைமுகத்தை நோக்கி கப்பல் வந்து கொண்டு இருந்தது. மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதலின் பின்னணியில், வர்த்தக கப்பல்களை ராணுவ தாக்குதல்களின் இலக்காக மாற்றுவது கண்டிக்கத்தக்கது. இந்த மோதலின் முந்தைய கட்டங்களில் நடந்த பல தாக்குதல்களில் இந்தியர்களையும் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது நடைபெறும் தாக்குதல்களின் தீவிரமும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications