மரணம்... வார்த்தையாகச் சொல்லக் கூட பயப்படும் இங்கிலாந்து மக்கள்: ஆய்வில் தகவல்
லண்டன்: இறப்பதைப் பற்றிப் பேசுவதற்கு கூட இங்கிலாந்து மக்கள் மத்தியில் மனத்தடை உள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பிறப்பைப் போலவே இறப்பு என்பது விதி என்பதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பலரிடம் இருப்பதில்லை. அதிலும், குறிப்பாக இங்கிலாந்து மக்கள் மரணம் பற்றி விவாதிப்பது அல்லது பேசிக்கொள்வது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவதில்லையாம்.
மரணம் பற்றிய பேச்சு என்பது பிரிட்டனில் இன்னும் அபூர்வ நிகழ்வாகவே இருப்பதாக அங்குள்ள சேவை நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இறப்பு குறித்த விசயங்களுக்கான கூட்டணி...
சுமார் இரண்டாயிரம் பேரிடம் இறப்பு குறித்த அவர்களின் கருத்துக்களை பெற்று ஆய்வு மேற்கொண்டது இங்கிலாந்தில் உள்ள 'இறப்பு குறித்த விஷயங்களுக்கான கூட்டணி ' என்ற தன்னார்வ அமைப்பு.
உயில்...
அதன் மூலம், இங்கிலாந்தில் மூன்றில் ஒரு பங்கினரே உயில் எழுதி வைத்திருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளதாம்.
இறுதிக் கிரியைகள்...
அதேபோல், தங்களுக்கு என்ன விதமான இறுதிக்கிரியைகள் வேண்டும் என்ற விருப்பத்தைப் பற்றியும் மூன்றில் ஒரு பங்கு மக்களே விவாதித்திருக்கின்றனர்.
ஐந்தில் ஒரு பங்கினர் தான்...
இந்த ஆய்வின் மூலம் இங்கிலாந்தில் ஐந்தில் ஒரு பங்கினர்தான் தங்களது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் என்ன செய்யவேண்டும் என்பது குறித்த தங்களது விருப்பங்களைப் பற்றி வேறு யாரிடமோ பேசியிருப்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
வேறு பல கலாச்சாரங்களில்...
இங்கிலாந்தில் இது போல நிலை இருந்தாலும் வேறு பல கலாசாரங்களில், இறப்பு குறித்துப் பேசுவது என்பது தவிர்க்கப்படும் ஒரு விஷயமாகப் பார்க்கப்படுவதில்லை.
தேசிய அளவில் ஒரு விவாதம்...
இந்த ஆய்வின் முடிவாக, ‘இறப்பு மற்றம் இறப்பது குறித்து தேசிய அளவில் ஒரு விவாதம் நடத்தப்படவேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளது அந்த அமைப்பு.
பொருத்தமான சேவையைப் பெற...
மேலும், மக்கள் இறப்பதைப் பற்றி மேலும் அதிகமாகப் பேசினால் தவிர, மரணம் சம்பவிக்கும்போது அவர்கள் பொருத்தமான சேவையைப் பெறமாட்டார்கள் என அறிவுரையும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications