கைவிட்டுட்டுங்களே.. வடமேற்கு சிரியாவில் நீளும் துயரம்.. பசியால் 8.7 லட்சம் பேர் தவிப்பு.. கதறும் ஐநா
இங்கு 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். இது தவிர 2.6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டமாகஸ்: கடந்த 6ம் தேதி துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் சுமார் 33 ஆயிரம் பேரை பலி வாங்கியுள்ளது. அதேபோல போரினால் ஏற்கெனவே கடுமையான பாதிப்புகளை சந்தித்து தற்போது நிலநடுக்கத்தால் அனைத்தையும் இழந்து நிற்கும் வடமேற்கு சிரிய மக்களுக்கு போதுமான நிவாரணப்பொருட்கள் சென்று சேரவில்லை என ஐநா அதிருப்தி தெரிவித்துள்ளது.
6ம் தேதி அதிகாலை துருக்கியில் ரிக்டர் அளவில் சுமார் 7.8 எனும் அளவில் நிலநடுக்கம் பதிவானது. இதனையடுத்து அடுத்த 12 மணி நேரத்திற்குள் ரிக்கடர் அளவில் 7.6 என மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. தொடர்ந்து 5 முறை லேசான நில அதிர்வும் ஏற்பட்டது. இதனால் சுமார் 6,000 கட்டிடங்கள் முற்றிலுமாக சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் ஒரு வாரக்காலமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல பல்வேறு நாடுகள் துருக்கிக்கும், சிரியாவுக்கும் மீட்புப்படைகளையும், நிவாரணப்பொருட்களையும் அனுப்பி வைத்தன. ஆனால் ஏற்கெனவே போரினால் பாதிக்கப்பட்ட வடமேற்கு சிரிய மக்களுக்கு போதுமான நிவாரணப்பொருட்கள் சென்று சேரவில்லையென்று ஐநா கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பாளருக்கான துணை பொதுச்செயலாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் இது குறித்து கூறுகையில்,

வடமேற்கு சிரியா
"நாங்கள் இதுவரை வடமேற்கு சிரியாவில் உள்ள மக்களை சென்றடையவில்லை. அவர்கள் கைவிடப்பட்டுள்ளதாக உணர்கிறார்கள், சர்வதேச உதவி எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த பகுதிக்கு பொருட்கள் வருவதில் தாமதம் இருக்கிறது" என்று கூறியுள்ளார். கடந்த 12 ஆண்டுகளாக இங்கு நடைபெற்று வந்த மோதல் சுகாதார கட்டமைப்பை முழுமையாக தகர்த்திருக்கிறது. இங்குள்ள கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு அதிபர் பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்திற்க எதிராக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கிடையில் கயிறுகள், மெத்தைகள், போர்வைகள், தரைவிரிப்புகள் மற்றும் சில கருவிகளுடன் 10 லாரிகள் ஐநா சார்பில் பாப் அல்-ஹவா வழியாக இப்பகுதிக்குள் நுழைந்திருக்கின்றன.

கிளர்ச்சியாளர்களின் தொல்லை
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு சிரியாவுக்கு செல்ல பாப் அல்-ஹவாதான் ஒரே வழி. இந்த வழியாக ஏற்கெனவே சில வாகனங்களில் மீட்புப் படையினர் வந்துள்ளன. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த படையினர் திரும்ப வந்துவிட்டனர். ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் 140 மணி நேரத்திற்கு பின்னரும் இடிபாடுகளுக்குள் பலரும் உயிருடன் சிக்கியுள்ளனர். ஹடாய் மாகாணத்தில் இப்படி 7 மாத கைகுழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது. காசியான்டெப்பில் 13 வயது சிறுமியும் இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால், மீட்பு படையினரை கிளர்ச்சியாளர்கள் உள்ளே விடாமல் தடுத்து வருகின்றனர்.

கேள்விக்குறி
உயிருக்கு போராடுபவர்களின் நிலை இப்படி இருக்கையில், உயிர் பிழைத்திருப்போரின் அன்றாட வாழ்க்கை மிகப்பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. சிரியாவில் மட்டும் சுமார் 8,70,000 பேருக்கு உணவு தேவைப்படுவதாக ஐநா கூறியிருக்கிறது. இங்கு 50 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். இது தவிர 2.6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் மருத்துவமனைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. மற்றொருபுறம் தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களிடம் போதுமான கருவிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உதவி
இதுவரை சிரியாவுக்கு நிவாரணப்பொருட்கள் மற்றும் பேரிடர் மீட்பு படைகளை தாங்கியவாறு சுமார் 62 விமானங்கள் தரையிறங்கியுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்துத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இனி வரும் காலங்களில் அரபு நாடுகளிலிருந்து மேலும் சில விமானங்களில் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications