ஹமாஸ் வசம் இருக்கும் பெண்கள்.. கர்ப்பமடைவதாக குற்றச்சாட்டு! இஸ்ரேலில் வெடிக்கும் புது பிரச்னை!
ஜெருசலேம்: இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி பணய கைதிகளாக பெண்களை பிடித்து சென்றிருந்தனர். இந்நிலையில் இந்த பெண்களில் சிலர் இன்னும் மீட்கப்படவில்லை. எனவே அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கருவடையும் அபாயம் எழுந்திருப்பதாக இஸ்ரேலிய மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் போர்களில் இஸ்ரேல்-ஹமாஸ் போரும் ஒன்று. பாலஸ்தீனத்தில் அகதிகளாக வந்த இஸ்ரேலியர்கள், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆதரவுடன் பாலஸ்தீனத்தை இரண்டாக உடைத்து அதில் இஸ்ரேலை உருவாக்கினர். மட்டுமல்லாது அதை தொடர்ந்து விரிவுபடுத்தவும் முயன்று வருகின்றனர். இதற்கு எதிராக பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் தொடர்ந்து சண்டை செய்து வருகிறது.

இந்த சண்டைகளின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு, இஸ்ரேலுக்குள் அதிரடியாக புகுந்த பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், அங்கிருந்து சிலரை பணய கைதிகளாக பிடித்து கொண்டு வந்தது. போர் தீவிரமடைந்து வந்த நிலையில், அரபு நாடுகள் தலையிட்டு போர் நிறுத்தத்திற்கு முயன்றன. ஆனால், சில நாட்கள் மட்டுமே போர் நிறுத்தம் நீடித்தது. இந்த சமயத்தில் ஹமாஸ் வசம் இருந்த பணய கைதிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆனால், இதில் மற்றொரு பிரச்னை வெடித்திருக்கிறது. அதாவது, ஹமாஸ் வசம் இருந்த இஸ்ரேலிய பணய கைதிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கருவுற்றதாக புகார்கள் எழுந்தன. கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட 110 பணய கைதிகளில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததாக அவர்களுக்கு சிகிச்சையளித்த இஸ்ரேலிய மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
"சிலருக்கு கடுமையான வன்கொடுமை நடந்திருக்கிறது, பெண்களுக்கு மாதவிடாய் நின்றிருக்கிறது. எனவே அவர்கள் பத்திரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் குரல் எழுந்திருக்கின்றன. ஹமாஸ் வசம் இருந்த கைதிகள் இது குறித்து கூறுகையில், "எங்களுடன் இருந்த இஸ்ரேலிய பெண்களுக்கு அரைகுறை ஆடைகள் தரப்பட்டன. போதுமான அளவு உடைகள் இருந்தபோதும், அவர்கள் மிகவும் சிறிய உடைகளை அணிந்துக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர்" என்று கூறியுள்ளனர்.
இஸ்ரேலிய உள்ளூர் ஊடகங்களிலும் இது தொடர்பான விஷயம் வேகமாக பரவிய நிலையில், குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால் கருவை கலைக்க முடியாது, எனவே எங்கள் பெண்களை உடனே மீட்டு தாருங்கள் என்று இஸ்ரேலிய மக்கள் தீவிரமான போராட்டத்தில் குதித்துள்ளனர். ஒருவேளை இஸ்ரேலிய பெண்கள் மீட்கப்படுவது தாமதமானால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தையை வளர்க்க அரசிடமிருந்து உரிய சட்ட உதவிகள் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எப்படி இருப்பினும், பணய கைதிகள் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால், அதே நேரம் இந்த குற்றச்சாட்டுகளை ஹமாஸ் தரப்பு கடுமையாக மறுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications