குவைத்தில் திருமாவளவனுக்கு நல்லிணக்க நட்சத்திரம் விருது
குவைத்: குவைத்தில் நடந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு நல்லிணக்க நட்சத்திரம் என்ற விருது வழங்கப்பட்டது.

குவைத்தில் இயங்கி வரும் தமிழ் அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த 10ம் ஆண்டு ஐம்பெரும் மீலாது விழா நிகழ்ச்சிகள் அச்சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா பாகவீ அவர்களின் தலைமையில் கடந்த 1ம் தேதி துவங்கியது.

முதல் நாள் விழா குவைத்தில் உள்ள ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் விழா நடைபெற்றது. இரண்டாம் நாள் விழா வெள்ளிக்கிழமை (02.01.2015) அன்று குவைத் சிட்டி பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலான மஸ்ஜிதுல் கபீர் பெரிய கூடாரத்தில் நடைபெற்றது. சனிக்கிழமை (03.01.2015) அன்று ஃபஹாஹீல் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நிறைவு விழா நடைபெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளையும் செயலாளர் மல்வலீ அ.பா. கலீல் அஹ்மது பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார்.
இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லவீ ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி, தமிழக அரபிக் கல்லூரிகள் கூட்மைப்பின் தலைவர் மவ்லவீ ஓ.எம். அப்துல் காதிர் பாகவீ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
அவ்விழாவில் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் சார்பில் அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி அவர்களுக்கு ‘நபிமொழிக் களஞ்சியம்', அப்துல் காதர் பாகவீ அவர்களுக்கு ‘சொற்பொழிவுத் திலகம்', திருமாவளவன் அவர்களுக்கு ‘நல்லிணக்க நட்சத்திரம்' மற்றும் ஆளுர் ஷா நவாஸ் அவர்களுக்கு ‘ஆவணப்பட ஆளுநர்' விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் குவைத் இஸ்லாமிய சங்கத்தின் 10ம் ஆண்டு சிறப்பு மலர், மா மனிதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்று அட்டவணை மற்றும் 2015ம் ஆண்டு வருட நாட்காட்டி ஆகியவை வெளியிடப்பட்டன. ‘வாழ்நாள் சமூக சேவையாளர்' விருதினை டெல்லி பாஷா (எ) அப்துல் காதர் பெற்றுக் கொண்டார்.

மாநாட்டு உரையில் தொல். திருமாவளவன், ‘இந்து மதம் தீண்டத்தகாதோர் என்று எங்களை தள்ளி வைக்கிறது; கோயில்களில் வழிபாடு நடத்த அனுமதிக்க மறுக்கிறது; சமூகத்தில் எங்களை புறக்கணிக்கிறது; எங்கள் உரிமைகளை மறுக்கிறது. ஆனால், இஸ்லாம் எங்களை கட்டித் தழுவுகிறது; மசூதிக்குள் எங்களை அனுமதிக்கிறது; ஒன்றாகச் சேர்ந்து வழிபாடு நடத்த ஆர்வமூட்டுகிறது; முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருக்கும் உள்ள அனைத்து உரிமைகளையும் எங்களுக்கும் வழங்குகிறது; ஆகவே, இஸ்லாம் என்னை ஈர்க்கிறது; ஆனால், இந்து மதம் என்னை ஈர்க்கவில்லை; இஸ்லாம் ஒரு மதம் அல்ல மாறாக அது ஒரு மார்க்கம் - வாழ்க்கைப் பாதை என்று குறிப்பிட்டார்.
மூன்று நாட்கள் நான்கு இடங்களில் தொடராக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் குவைத்தில் வசித்து வரும் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் வெளியீடுகள் அனைத்தும், இரவு உணவும் வழங்கப்பட்டன. குவைத் சிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவரை குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தமிழகத்தில் ஒரு வீட்டு மனை இலவசமாக வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications