பயங்கரவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.. ஆஸ்திரியாவில் முழங்கிய பிரதமர் மோடி
வியன்னா: பயங்கரவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது, எங்கிருந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது என ஆஸ்திரியா பிரதமர் உடனான சந்திப்புக்குப் பிறகு தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இரவு ஆஸ்திரியா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மர், பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்றார். மேலும், பிரதமர் மோடியோடு செல்ஃபி எடுத்துக்கொண்டார். ஆஸ்திரியாவில் உள்ள இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

புதன்கிழமை காலை, ஆஸ்திரியா பிரதமர் கார்ல் நெகம்மரை, பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, இரு தரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாகவும், உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து, மேலும் பல்வேறு பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். இதனைத் தொடர்ந்து, இரு தலைவர்களின் முன்னிலையில், இரு தரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் தொடர்பாக இரு நாடுகளின் உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரிய பிரதமர் கார்ல் நெகம்மரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, "ஆஸ்திரிய பிரதமர் நெகம்மரும் நானும் மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தையை நடத்தினோம். இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய சாத்தியக்கூறுகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எங்கள் உறவுக்கு ஓர் அடிப்படையான திசையை வழங்க முடிவு செய்துள்ளோம். வரும் பல பத்தாண்டுகளுக்கான ஒத்துழைப்புக்கான வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மோதலாக இருந்தாலும் சரி அல்லது மேற்கு ஆசியாவின் சூழ்நிலையாக இருந்தாலும் சரி, உலகம் முழுவதும் நடந்து வரும் மோதல்கள் குறித்து அதிபர் நெகம்மரும் நானும் நீண்ட நேரம் உரையாடினோம். இது போருக்கான நேரம் அல்ல என்று நான் முன்பே கூறியுள்ளேன். போர்க்களத்தில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாது. இந்தியாவும் ஆஸ்திரியாவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தை வலியுறுத்துகின்றன. அதற்கு தேவையான எந்த ஆதரவையும் வழங்க தயாராக இருக்கிறோம்.
இந்தியா மற்றும் ஆஸ்திரியா ஆகிய இரு நாடுகளும் பயங்கரவாதத்தை கடுமையாக கண்டிக்கின்றன. அது எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை வலியுறுத்துகிறோம். பயங்கரவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. எங்கிருந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது.
எனது மூன்றாவது பதவிக்காலத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரியாவுக்கு வரும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய இந்த பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரியா வந்துள்ள இந்திய பிரதமர் நான். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி போன்றவற்றில் உள்ள நம்பிக்கையே இந்தியா - ஆஸ்திரியா உறவுகளுக்கு வலுவான அடித்தளம். பரஸ்பர நம்பிக்கை மற்றும் பரஸ்பர நலன்கள் எங்கள் உறவுகளை வலுப்படுத்துகின்றன.
ஐ.நா சபை மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களை காலத்துக்கு ஏற்பவும், பயனுள்ள வகையிலும் சீர்திருத்த நாங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறோம். உள்கட்டமைப்பு மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஹைட்ரஜன், நீர் மற்றும் கழிவு மேலாண்மை போன்ற துறைகளில் இந்த உறவுகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளோம்." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications