மிஷினரிக்குள் புகுந்து மூத்த கன்னியாஸ்திரிகள் மூவர் பலாத்காரம் செய்து படுகொலை!
புஜும்புரா: 80 வயதையொட்டிய இத்தாலி நாட்டு மூத்த கன்னியாஸ்திரிகள் மூன்று பேர் ஆப்பிரிக்க நாடான புருண்டியில் பலாத்காரம் செய்து கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள பின்தங்கிய நாடுகளில் ஒன்று புருண்டி. இதன் தலைநகர் புஜும்புரா. இங்குள்ள மிஷினரியொன்றில் கன்னியாஸ்திரிகளாக சேவை செய்த ஒலிகா ரசிட்டி (75), லூசியா புலிசின் (82) மற்றும் பெர்னாடட்டா போஜியான் (79) ஆகிய மூன்று மூத்த கன்னியாஸ்திரிகள் பலாத்காரத்திற்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டவர்களாகும்.
ஏழைகளுக்கு சேவை
இத்தாலியை சேர்ந்த இம்மூன்று கன்னியாஸ்திரிகளும், 7 ஆண்டுகளாக புஜும்புராவிலுள்ள மிஷினரியில் தங்கியிருந்து ஏழை, எளிய மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வந்தனர்.
மதமாற்றம் அதிகரிப்பு
பல ஆண்டுகளாகவே கிறிஸ்தவ மிஷினரிகள் ஆப்பிரிக்க நாடுகளில் காலூன்றி சேவையாற்றியதன் விளைவாக பலரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் புருண்டி நாட்டில் மட்டும் 60 சதவீத மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக உள்ளனர். உலகின் மிக மோசமான ஏழ்மை நிலவும் ஐந்து நாடுகளில் புருண்டியும் ஒன்று என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
மதமாற்றத்திற்கு எச்சரிக்கை?
மதமாற்றத்திற்கு எதிராக ஆப்பிரிக்காவின் பூர்வ குடிமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எனவே, மதமாற்றத்திற்கு எதிரான எச்சரிக்கையாக இக்கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அடுத்தடுத்த இரவுகளில் கொலை
ஒலிகா ரசிட்டி மற்றும் லூசியா புலிசின் (82) ஆகியோர் 7ம்தேதி இரவில் மர்ம நபரால் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். மறுநாள் காலை போலீசார் வந்து விசாரணை நடத்தி சென்றனர். இந்நிலையில் 8ம்தேதி அதே மிஷினரி கட்டிடத்தில் பயமின்றி பெர்னாடட்டா போஜியான் (79) தங்கியிருந்தார். அவரும் அன்று இரவு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார்.
வாடிகன் இரங்கல்
மூன்று கன்னியாஸ்திரிகள் கொலை செய்யப்பட்டதற்கு வாடிகன் தனது இரங்கலை தெரிவித்துள்ளது. ஏழைகளுக்காக பாடுபட்டவர்களுக்கு இந்த முடிவு ஏற்பட்டுவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளது.