அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்! மூன்று பேர் பலி.. 4 பேர் படுகாயம்! ஒருவர் கைது
நியூயார்க்: அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள அனாபோலிஸ் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இந்நாட்டில் 100 பேரிடம் 120 துப்பாக்கிகள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்கிற அச்சமும் மேலெழுந்திருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் 24ம் தேதி அமெரிக்காவின் உவால்டே பகுதியில் உள்ள பள்ளியில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் சுமார் 21 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு முன்னர் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள்தான் அதிக அளவில் உயிரிழந்திருந்தனர். ஆனால் 21 மாணவர்கள் உயிரிழந்திருப்பது அந்நாட்டு மக்களின் மனசாட்சியை உலுக்கியது. தற்போது இந்த சம்பவத்தை தொடர்ந்து, மேரிலாந்தில் உள்ள அனாபோலிஸ் நகரில் வீடு ஒன்றில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி எட் ஜாக்சன் கூறுகையில்,
"திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து, நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தோம். அங்கு ரத்த வெள்ளத்தில் சிலர் துடித்துக்கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் இதில் சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீதம் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது சந்தேகத்திற்கிடமான ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்கள் இனி பயப்பட வேண்டியதில்லை" என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே கடந்த 7ம் தேதி வர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் கண்மூடித்தனமாக மர்ம நபர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications