மாயமான விமானத்தின் பைலட் ஏன் பிரச்சனை இருந்தும் பொய் சொன்னார்?
செபாங்: மாயமான விமானத்தின் சிக்னல் சிஸ்டம் செயல் இழக்கச் செய்யப்பட்ட பிறகு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி எந்தவித பிரச்சனையைப் பற்றியும் தெரிவிக்காமலேயே பேசியுள்ளார்.
கடந்த 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய விமானம் மாயமானது. விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது விமானம் கடத்தப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக இதில் விமானி அல்லது விமானிகளின் பங்கு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விமானத்தில் உள்ள சிக்னல் சிஸ்டங்கள் செயல் இழக்கச் செய்யப்பட்ட பிறகு விமானி ஒருவர் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் விமானத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் விமானம் கடத்தப்பட்டதில் விமானி அல்லது இரண்டு விமானிகளின் பங்கும் இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
விமானம் வழக்கமான வழியில் இருந்து மாறி வேறு வழியில் ஆயிரக்கணக்கான மைல்கள் பறந்துள்ளது. விமானம் எதற்காக வழி மாறியது, ஏன் அத்தனை மைல்கள் பறந்தது என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.