புலிக்கூண்டில் தவறி விழுந்த 2 வயது சிறுவன்... காப்பாற்றக் குதித்த தந்தை... பார்வையாளர்கள் ஷாக்!
நியூயார்க்: அமெரிக்காவில் சிவிங்கிப் புலி கூண்டில் தவறி விழுந்த 2 வயது சிறுவனை அவனது தந்தை மற்றும் பார்வையாளர்கள் பத்திரமாக மீட்டனர்.
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் கிலேவ்லாண்ட் பகுதியில் வனவிலங்கு காப்பகம் ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான கொடிய விலங்குகள் வளர்த்து, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த வனவிலங்கு காப்பகத்திற்கு தினமும் ஏராளமான மக்கள் சுற்றிப் பார்க்க வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று 2 வயது மகனுடன் வனவிலங்கு காப்பகத்திற்கு வந்த தம்பதி ஒன்று சிவிக்கிப் புலிகள் வளர்ப்பு பகுதிக்கு சென்றனர். மகனுக்கு சிவிங்கிப் புலியை அவர்கள் வேடிக்கைக் காட்டிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அச்சிறுவன் சிவிங்கிப் புலி பகுதிக்குள் விழுந்தான்.
சிறுவன் விழுந்ததை சிவிங்கிப் புலிகள் கவனிக்கவில்லை. எனினும், இதை க் கண்டு மற்ற பார்வையாளர்களும், காப்பக ஊழியர்களும் அலறியடித்து கூச்சலிட தொடங்கினர். விரைந்து செயல்பட்ட சிறுவனின் தந்தை, தாமதிக்காமல் தானும் தடுப்புப் பகுதிக்குள் குதித்து மகனை தூக்கிக் கொண்டு விரைந்தா. ஆனால், அவரால் கம்பித் தடுப்பைத் தாண்டி வெளியே வர முடியவில்லை.
கையில் மகனோடு தவித்துக் கொண்டிருந்த தந்தையை, மற்ற பார்வையாளர்கள் கை கொடுத்து வெளியே இழுத்துக் காப்பாற்றினார்கள். இதனால், அதிர்ஷ்டவசமாக சிறு சிறு காயங்களுடன் அச்சிறுவன் உயிர் தப்பினான்.
இச்சம்பவத்துக்கு காரணமான அந்த சிறுவனின் பெற்றோர் மீது குற்றவியல் சட்டங்களின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோபார்க்ஸ் ஜூ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோல் கடந்தாண்டு டெல்லி உயிரியல் பூங்காவில் புலிக் கூண்டிற்குள் தவறி விழுந்த மாணவரை, புலி கடித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications