ஈரான் போரில் மையபுள்ளியாக மாறிய Touska.. ஹார்முஸ் நீரிணையில் என்ன நடந்தது?
மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவும் பதற்றத்துக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான நிலையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்கப் படைகள் ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கொடி கொண்ட Touska என்ற கண்டெய்னர் கப்பல் மீது தாக்குதல் நடத்தி தற்போது இக்கப்பலை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் இந்த சம்பவம் பாகிஸ்தானில் நடைபெறும் 2ஆம் கட்ட பேச்சுவாத்தையில் ஈரான் பங்கேற்க முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஈரான் மீதான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் Touska கண்டெய்னர் கப்பல் விவகாரம் அடுத்தக்கட்ட தாக்குதல் (போரின்) மையபுள்ளியாக மாறியுள்ளது.

Touska கப்பல்
Touska என்பது 294.1 மீட்டர் நீளமும் 32.5 மீட்டர் அகலமும் கொண்ட பெரிய கண்டெய்னர் கப்பல். மலேசியாவின் போர்ட் கிளாங் துறைமுகத்திலிருந்து எட்டு நாட்களுக்கு முன்பு புறப்பட்ட இந்தக் கப்பல், ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. மரைன் டிராஃபிக் மற்றும் வெசல் ஃபைண்டர் தளங்களின்படி, இது வழக்கமான சரக்கு போக்குவரத்து கப்பல் ஆகும்.
அமெரிக்கா கப்பலை எப்படி பிடித்தது?
அமெரிக்க ராணுவம் தெரிவித்தபடி, ஞாயிற்றுக்கிழமை ஆறு மணி நேரத்துக்கு மேல் Touska கப்பலின் குழுவினருக்கு பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. கப்பல் அமெரிக்காவின் கடற்படைத் தடையை மீறி ஈரானுக்குள் செல்வதாகக் கூறப்பட்டது. கப்பலில் இருக்கும் குழுவினர் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாததால், அமெரிக்க போர்க்கப்பல் 5 இன்ச் (13 செ.மீ) MK 45 துப்பாக்கியால் Touska கப்பலின் இன்ஜின் அறைக்கு குறிவைத்து தாக்கியது. இதநால் கப்பலின் இயக்கம் முடங்கியது. பின்னர் அமெரிக்கப் படையினர் கப்பலுக்குள் ஏறி அதை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். தற்போது கப்பல் அமெரிக்காவின் பாதுகாப்பில் உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது Truth Social பக்கத்தில் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தினார். "ஈரான் கொடி பறக்கும் Touska கப்பல் எங்கள் கடற்படைத் தடையை மீற முயன்றது. எங்கள் போர்க்கப்பல் எச்சரித்ததும், கப்பல் இயக்கும் குழுவினர் கேட்கவில்லை. எனவே கப்பலை தாக்கினோம் அமெரிக்க கடற்படை (மரைன்ஸ்) இப்போது அந்த கப்பலில் என்ன இருக்கிறது என்று முழுமையாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான் தரப்பின் கடுமையான எதிர்ப்பு
ஈரான் ராணுவம் இந்த நடவடிக்கையை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று வன்மையாகக் கண்டித்துள்ளது. விரைவில் இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் தரப்பு, அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பதற்றத்தை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் கப்பல்
இதே ஹார்முஸ் நீரிணையில் சனிக்கிழமை பிரெஞ்சு கப்பல் நிறுவனமான CMA CGM-ஐச் சேர்ந்த ஒரு கப்பல் மீது ஈரான் எச்சரிக்கை குண்டுகள் வீடப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் டிரம்ப் ட்ரூத் சோசியல் பதிவில் சொல்லப்பட்ட விஷயங்கள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் கப்பலில் இருக்கும் குழுவினர் யாரும் காயமடையவில்லை என்றாலும், கப்பல் சேதமடைந்துள்ளது.
சர்வதேச கடல் அமைப்பின் (IMO) வெளியிட்டுள்ள தகவல் படி இந்த கப்பல் பெயர் Everglades என்று அடையாளம் காட்டியுள்ளது. இருப்பினும், சேதத்தின் அளவு குறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்வு
ஹார்முஸ் நீரிணை உலகின் மிக முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழி. இங்கு ஏற்படும் சின்ன பதற்றமும் உலக எண்ணெய் விலையை பாதிக்கும். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இந்தச் சம்பவம், ஏற்கனவே நிலையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் பலவீனப்படுத்தும் விஷயமாக உள்ளது.
ஹார்முஸ் வழித்தடத்தை தற்போது ஈரான் IRGC மற்றும் அமெரிக்க கடற்படை முடக்கியுள்ளதால் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தடாலடியாக குறைந்த கச்சா எண்ணெய் இன்று உயர துவங்கியுள்ளது. சர்வதேச பியூச்சர்ஸ் மார்கெட்டில் (Futures Market) அமெரிக்காவில் WTI கச்சா எண்ணெய் விலை 88.93 டாலராக உள்ளது. இதேபோல் உலகளாவிய கச்சா எண்ணெய்க்கு பென்ச்மார்க் ஆக இருக்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 5.65 சதவீதம் உயர்ந்து 95.49 டாலராக உள்ளது.












Click it and Unblock the Notifications