'சுதந்திர தேவியின் கண்களிலிருந்து ரத்தக் கண்ணீர் வடியும் நாள் இது!'... ட்ரம்புக்கு கடும் எதிர்ப்பு
வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளிக் கிழமை புதிதாக ஒரு அரசாணையை பிறப்பித்துள்ளார். அதன்படி சிரியாவிலிருந்து அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க காலவரையின்றி தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புக்காக தீவிரவாதிகளை அமெரிக்காவுக்குள் வரவிடாமல் தடுப்பது என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அடுத்த 90 நாட்களுக்கு குறிப்பிட்ட நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள் அமெரிக்காவுக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிரியா, சூடான், லிபியா, ஏமன், சோமாலியா நாடுகளுக்கு இந்த தடை பொருந்தும் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் சி.என்.என் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.
அதே போல் அடுத்த 120 நாட்களுக்கு அமெரிக்காவுக்குள் அகதிகளாக யாரும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. பின்னர், ட்ரம்ப் அரசின் ஆட்சிக்குழு முடிவு செய்யும் நாடுகளிலிருந்து மட்டுமே அகதிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
அகதிகளுக்கும் ஆண்டுக்கு 50ஆயிரம் பேர் மட்டுமே என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அகதிகளாக அனுமதிக்கப்படுகிறார்கள்.
அந்தந்த நாட்டில் சிறுபான்மையினராக இருப்பவர்களுக்கு அகதிகளாக வர முன்னுரிமை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது கிறித்துவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காகவே இந்த விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளதாகக்
கூறப்படுகிறது.
விசா வாங்குவதற்கு நேர்முகக் காணல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இது வரையிலும் குறிப்பிட்ட நாடுகளிலிருந்து அடிக்கடி வருபவர்களின் வசதிக்காக நேர்முகத் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இனி அனைவரும் விசா அலுவலகத்திற்கு சென்று நேர்முக காணலில் பங்கேற்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை ட்ரம்ப் பிறப்பித்த இன்னொரு ஆணையில், ராணுவத்திற்கான செலவுகளை அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். கப்பல்கள், விமானங்கள் மற்றும் புதிய கட்டமைப்புகளுக்காக இந்த கூட்டுல் நிதி ஒதுக்கீடு செலவிடப்படும்.
நியூயார்க் விமான நிலையத்தில் போராட்டம்
அதிபரின் சட்டம் அமலுக்கு வந்த உடன், நியூயார்க் விமான நிலையத்தில் வந்து இறங்கிய அகதிகளும், 7 நாடுகளின் குடியுரிமை பெற்றவர்களுக்கும், குடியுரிமைப் பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ப்ரூக்ளின் நகர தேசிய நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரித்த நீதிபதி, விமான நிலையத்தில் உரிய விசா மற்று அகதிக்கான ஆவணம் உள்ளவர்களை அமெரிக்காவுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.
அதைப்போல் வாஷிங்டன் டிசியில் உள்ள நீதிமன்றத்திலும், அங்குள்ள விமான நிலையப் பயணிகளை உரிய விசா வைத்து இருந்தால் அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
முஸ்லீம்களுக்கு தடை என்பது தவறு- ட்ரம்ப்
இந்த தடை முஸ்லீம்களுக்கோ, இஸ்லாத்துக்கோ எதிரானது அல்ல. தீவிரவாதத்திற்கு எதிரானது, அமெரிக்கப் பாதுகாப்புக்கான நடவடிக்கை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட் நாட்டைச் சேர்ந்த, அமெரிக்க க்ரீன் கார்டு உள்ளவர்களும், அமெரிக்காவுக்குள் நுழையத் தடை என்பது மிகவும் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
ட்ரம்ப் தடை விதித்துள்ள நாட்டைச் சார்ந்தவர்கள், அமெரிக்காவில் எந்த தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை. சவுதி அரேபியா உள்ளிட்ட நாட்டைச் சார்ந்தவர்கள்தான் அமெரிக்காவில் தீவிரவாத செயல்களை நிறைவேற்றியுள்ளனர். அந்த நாட்டைத் தவிர்த்து மீதி 7 நாடுகள் மீதான தடைக்கு என்ன காரணம் என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்பு
அதிபர் ட்ரம்பின் அரசாணைகளை குடியரசுக் கட்சித் தலைவரும், பாராளுமன்ற அவை சபாநாயகருமான பால் ரயன் வரவேற்றுள்ளார்.முதலில் நாட்டின் பாதுகாப்பு அவசியம். அதற்காக சில குறிப்பிட்ட நாடுகளின் அகதிகளை நிறுத்தி வைப்பதில் தவறில்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஜனநாயகக்கட்சியின் செனட்டர், கலிஃபோர்னியா கமலா ஹாரிஸ், ட்ரம்பின் அரசாணை இஸ்லாமியர்களுக்கு எதிரானது. தப்பு பண்ணாதீர்கள் இது இஸ்லாமியர்கள் தடை என்று கூறியுள்ளார். மேலும் போராட்டக்காரர்களுடன் களத்தில் இறங்கிப் போராடவும் ஆரம்பித்து விட்டார்.
ஜன நாயகக் கட்சி செனட் அவை தலைவர் சக் சூமர் சுதந்திர தேவியின் கண்களிலிருந்து ரத்தக் கண்ணீர் வடியும் நாள் இது. அமெரிக்கா குடியேறியவர்களால் உருவானது அகதிகளாக வந்தவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்கள், அது மனிதாபிமான நடவடிக்கையும் ஆகும். இதுவரையிலும் வந்துள்ள அதிபரின் அரசாணைகளில் மிகவும் மோசமானது இது தான் என்று சக் சூமர் கூறியுள்ளார்.
மனித உரிமை அமைப்புகளும். அமெரிக்கன் இஸ்லாமிய அமைப்புகளும் ட்ரம்பின் இந்த அரசாணையை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
-இர தினகர்