கண்ணை குத்தும் ட்ரம்ப்..இந்தியா கூட இருந்தே ஆப்பு வைக்கும் அமெரிக்கா! ஆக., 1ல் காத்திருக்கும் ஆபத்து
நியூயார்க்: ஐரோப்பிய யூனியன் இந்தியா உள்ளிட்ட உலகின் முக்கிய வர்த்தக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கையை மீண்டும் கையில் எடுக்க அமரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கை அமலாகும் என தகவல் வெளியாகியிருப்பது உலக அளவில் பொருளாதார அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு உலக நாடுகளுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறார். குறிப்பாக நட்பு பாராட்டும் இந்தியா, கனடா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நட்பு நாடுகள் மீது டொனால்ட் டிரம்ப் வர்த்தகப் போரை தொடர்ந்து இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
டொனால் ட்ரம்ப்: குறிப்பாக கனடா, இந்தியா, மெக்சிகோ, சீனா உள்ளீட்டு நாடுகளுக்கு அந்த இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் அதே அளவு வரியை ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கும் விதிக்கப்படும் என கூறியிருந்தார்.

இதற்கு சீனா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினர். அந்த நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒயின், ஷாம்பெய்ன், ஸ்டீல், அலுமினியம் உள்ளிட்ட பொருட்களுக்கு டொனால்ட் டிரம்ப் வரி விதித்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி விடுதலை நாள் என்ற பெயரில் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிவிதிப்பை டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
இதனால் உலகின் பல பணக்காரர்கள் பில்லியன் கணக்கான டாலர் மதிப்பிலான சொத்து மதிப்பை இழந்தனர். இது ஒரு புறம் இருக்க உலக அளவில் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. தொடர்ந்து சீனா உள்ளிட்ட நாடுகள் பரஸ்பர வரிவிதிப்பு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 90 நாட்களுக்கு இந்த வரிவிதிப்பு நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதற்கிடையே டொனால்ட் ட்ரம்ப் விதித்த வரி விதிப்பு தற்காலிக நிறுத்தம் ஜூலை 9ஆம் தேதி உடன் முடிவடைகிறது.
இந்தியாவுக்கும் 26 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில் 90 நாள் அவகாசம் ஜூலை ஒன்பதாம் தேதியான புதன்கிழமையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் பரஸ்பர வரிவிதிப்பு நடைமுறை அமலுக்கு வரும் என அதிரடியாக கூறியிருக்கிறார் அமெரிக்காவின் கருவூலத் துறை செயலரான ஸ்காட் பெசன்ட். இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் பரஸ்பர வரிவிதிப்பு விவகாரம் தொடர்பாக இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் அமெரிக்கா என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பல்வேறு விவகாரங்களில் அமெரிக்காவில் நெருங்கிய நட்பு நாடு என டொனால்ட் டிரம்ப் இந்தியாவை குறிப்பிட்டாலும் வரி விதிப்பு என வரும்போது இந்தியாவை கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் ஐரோப்பிய யூனியன், ஜப்பான் போன்ற நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் பரஸ்பர வரிவிதிப்பு விவகாரம் உலக அளவில் பெரும் பொருளாதார அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தங்கம், டீசல், பெட்ரோல் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications