என்னது மங்கோலியாவில் பூமி அப்டியே இடம்பெயர்ந்து 'ஆறு போல' ஓடியதா? வைரல் வீடியோக்களால் 'பரபர'
மங்கோலியாவில் பூமி இடம்பெயர்ந்ததாக 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
டெல்லி: மங்கோலியாவில் அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலையால் 'பூமி' அப்படியே ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம்பெயர்ந்து 'ஆறு போல் ஓடுகிறது' என ஷேர் செய்யப்பட்ட 2 வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இவை நிலச்சரிவின் ஒருவகை என்றும் பழைய வீடியோக்களே என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக மங்கோலியாவில் பூமி இடம்பெயரும் அதிசயம் எனக் குறிப்பிட்டு 2 வீடியோக்கள் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வீடியோ காட்சிகள் உண்மைதான் என்றாலும் பூமி இடம்பெயரவும் இல்லை; மங்கோலியாவில் இது நிகழவும் இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
முதல் வீடியோவில் கருமை நிற மண் அப்படியே ஆறுபோல் இடம்பெயர்ந்து செல்கிறது; 2-வது வீடியோவில் உயரமான குன்று பகுதி மெது மெதுவாக சரிந்து பேராறு நகர்ந்து செல்வது போல் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த இரு வீடியோக்களும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாக பரவியவைதான். 2 வீடியோக்களுமே நிலச்சரிவின் தன்மையை வெளிப்படுத்தக் கூடியவை என கூறப்படுகிறது.
நிலச்சரிவு வேகமாக அல்லது மெது மெதுவாக நிகழ்கின்ற போது இத்தகைய தோற்றம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 சீனாவிலும் 2010-ல் இத்தாலியிலும் நிகழ்ந்த இந்த நிலச்சரிவு வீடியோக்களை வைத்துதான் மங்கோலியாவில் பூமி அப்படியே இடம்பெயர்ந்து போகிறது என பீதி கிளப்பிவிட்டிருக்கின்றனராம் நெட்டிசன்கள்.