Tsunami: 3-4 மீட்டருக்கு எழுந்த சுனாமி பேரலைகள்.. நொறுக்கப்பட்ட துறைமுக நகரம்.. அலறி ஓடிய 2000 மக்கள்!
மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் 8.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுனாமி பேரலைகள் தாக்கி உள்ளன. ரஷ்யாவின் செவெரோ குரில்ஸ்க் துறைமுக நகரம் சுனாமி அலைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹவாய், சாலமன் தீவு உள்ளிட்ட இடங்களிலும் 3 மீட்டர் உயரத்துக்கு மேல் சுனாமி அலைகள் எழுந்துள்ளன.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் கம்சட்கா தீபகற்ப பகுதிக்கு கிழக்கு, தென்கிழக்கில் சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து ரஷ்யா, ஜப்பான் மற்றும் பசிபிக் கடலை ஒட்டியுள்ள நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மக்கள் உயரமான பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதற்காக சைரன் ஒலிக்கப்பட்டது.

இந்நிலையில், சுமார் 4 மீட்டர் உயரம் வரையிலான சுனாமி பேரலைகள் ரஷ்யாவின் குரில் தீவு பகுதியை தாக்கியது. தொடர்ந்து ஹவாய், சிலி, ஜப்பான் மற்றும் சாலமன் தீவுகளில் சுனாமி எச்சரிக்கையை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் விடுத்தது. இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதை ரஷ்யாவின் டாஸ் (TASS) செய்தி முகமை உறுதி செய்துள்ளது. மக்கள் அடைக்கலம் தேடி வீதிகளில் குவிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில், கம்சட்காவின் சில பகுதிகளில் 3-4 மீட்டர் (10-13 அடி) உயரமுள்ள சுனாமி பதிவாகியுள்ளதாகவும், அவசரகால சூழ்நிலைகளுக்கான சூழல் உள்ளதாகவும் அந்நாட்டு அமைச்சர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சுனாமி அலைகள் கடற்கரை பகுதிகளை தாக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
ரஷ்யாவின் செவெரோ - குரில்ஸ்க் கடற்கரையை சுனாமி தாக்கியதால், சுமார் 2,000 பேர் வசிக்கும் அந்த துறைமுக நகரம் நீரில் மூழ்கியதாக ரஷ்யாவின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. "சுனாமி துறைமுக நகரமான செவெரோ-குரில்ஸ்கின் சில பகுதிகளை நீரில் மூழ்கடித்தது. மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்" என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிலும் சுனாமி அலைகள் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் சுனாமி பேரலைகள் தாக்கி உள்ளன. "சுனாமி அலைகள் மீண்டும் மீண்டும் தாக்கும். எச்சரிக்கை நீக்கப்படும் வரை கடலுக்குள் நுழையவோ அல்லது கடற்கரையை நெருங்கவோ வேண்டாம்" என்று ஜப்பானிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுனாமி பேரலைகள் எழுந்ததைத் தொடர்ந்து பெட்ரோபாவ்லோவ்ஸ்க்- கம்சட்கியில் உள்ள மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தெருக்களில் அலறியடித்து ஓடி உள்ளனர். ஹவாய், சாலமன் தீவு உள்ளிட்ட இடங்களிலும் 3 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்துள்ளன.
அலாஸ்காவில் உள்ள தேசிய சுனாமி எச்சரிக்கை மையமும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவான், பிலிப்பைன்ஸ், அலாஸ்கா, ஹவாய், கலிபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேற்கு கடற்கரையின் பெரும்பகுதிக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் 7.4 ரிக்டர் அளவில் கம்சட்கா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications