சிலி நில நடுக்கம்: ஜப்பானை தாக்கியது சிறிய சுனாமி
டோக்கியோ: சிலி நாட்டில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ஜப்பானில் சுனாமி ஏற்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான தூரம் 17,228 கி.மீ. என்பது குறிப்பிடத்தக்கது.

தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் இக்யூக் நகரின் வடகிழக்கில் 99 கிமீ தொலைவில் பசிபிக் கடலில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 8.1 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி அலைகள் எழுந்தன. இதனால் கட்டிடங்கள் சேதமடைந்தன, பல்வேறு இடங்களில் தீ விபத்துகளும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இடிபாடுகளில் சிக்கியும், மாரடைப்பு ஏற்பட்டும் 6 பேர் பலியாகினர்.
இக்யூக் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணிநேரத்தில் 7.8 அளவுக்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 5.6 மற்றும் 5.8 அளவுக்கு அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அதன் அருகில் உள்ள ஜப்பானை சுனாமி தாக்கியுள்ளது. வடகிழக்கு ஜப்பானில் பசிபிக் கடலோரம் அமைந்துள்ள இவாடே என்ற இடத்தில் இன்று காலை 40 செமீ அளவுக்கு அலைகள் எழுந்தன. இதையடுத்து பசிபிக் கடலோரம் அமைந்துள்ள ஹொக்கைடோ, டொஹொகு, கன்டோ பகுதியில் சில இடங்கள், இசு மற்றும் ஒகஸவாரா தீவுகள் ஆகிய இடங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும் இவாடேவில் உள்ள குஜி துறைமுகத்தில் இன்று காலை 6.52 மணிக்கு 20 செமீ உயரத்திற்கு அலைகள் எழுந்தன. சிறிது நேரம் கழித்து அதிக உயரத்திலான சுனாமி அலைகள் வந்தன என்று ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந் நிலையில் சிலி நிலநடுக்கத்தையடுத்து வெளியிடப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.












Click it and Unblock the Notifications