சிரியா நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 34 ஆயிரமாக உயர்வு!.. எங்கும் மரண ஓலங்கள்.. குவியலாக இடிபாடுகள்
துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரமாக உயர்வு
துருக்கி: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 34 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்திய தேசிய மீட்பு படையை சேர்ந்த இரு மீட்பு நாய்கள் 6 வயது சிறுமியை இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்டன.
துருக்கியின் தென்கிழக்கே சிரியா எல்லையை ஒட்டியுள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு கடந்த 6ஆம் தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது.
இந்த பேரழிவு நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வுகளும் இரு நாடுகளையும் உலுக்கிவிட்டன. இந்த நிலநடுக்கத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் சீட்டு கட்டுகளை போல் நொடி பொழுதில் சரிந்து விழுந்தன.

நிலநடுக்கத்தின் போது மக்கள் தூக்கம்
இந்த நிலநடுக்கம் மக்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வந்ததால் பலரால் தப்ப முடியவில்லை. இதனால் குடியிருப்பு கட்டடங்கள், வீடுகள் என பல்வேறு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த இடிபாடுகளில் லட்சக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். இந்த நிலநடுக்கம் துருக்கியில் மட்டுமே 10 மாகாணங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினந்தோறும் முழு வீச்சில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அழுகுரல்கள்
எங்கு திரும்பினாலும் மக்களின் அழுகுரல்கள் கேட்கின்றன. இந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் விரைந்து நடைபெறுகின்றன. இரவு பகல் பாராமல் மீடபு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மலை போல குவிந்து கிடக்கும் கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தி வருகிறார்கள்.

உடல் பாகங்கள்
அதில் ரத்த கறைகளும், இறந்தவர்களின் சிதறிய உடல் பாகங்களும், சடலங்களும் கிடைக்கின்றன. உயிருடன் மீட்கப்படும் சிலரும் அதிக அளவில் பாதிப்புகளை பெற்றுள்ளார்கள். பலர் எவ்வித காயமும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர். இந்த மீட்பு பணிகளில் இந்தியா உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாட்டின் பேரிடர் மீட்பு படைகளையும் நவீன இயந்திரங்களையும், ஆம்புலன்ஸ் வாகனங்களையும் மருந்து பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளன.

1.10 லட்சம் மேற்பட்ட மீட்பு படையினர்
அந்த வகையில் 1.10 லட்சத்திற்கு மேற்பட்ட மீட்பு படையினர் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் டிராக்டர்கள், கிரேன்கள், புல்டோசர்கள் உள்பட 6 ஆயிரம் வாகனங்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கட்டட இடிபாடுகளில் இருந்து தோண்ட தோண்ட சடலங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. பலி எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை
பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,000 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில் 29,000 க்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 5000 க்கும் மேற்பட்டோரும் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். இன்று 8ஆவது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. இந்த மீட்பில் தொப்புள் கொடி அறுக்கப்படாத குழந்தை அயா மீட்கப்பட்டது. இந்த குழந்தையை தத்தெடுக்க உலக மக்கள் போட்டி போடுகிறார்கள்.

பேரிழப்பு
ஆனால் அவர்களின் தாய், தந்தை அல்லது தாய் அல்லது தந்தை இடிபாடுகளில் சிக்கி இறந்து கிடப்பதை பார்க்கும் போது அந்த குழந்தைகளின் நிலையை கண்டு மக்கள் கலங்குகிறார்கள். துருக்கியில் 6 வயது குழந்தையை இந்தியாவிலிருந்து சென்ற மீட்பு படையை சேர்ந்த இரு நாய்கள் மீட்டன. தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த ஜூலி மற்றும் ரோமியோதான் அந்த இரு நாய்களும்! இவரை இரண்டும் நூர்தாகியில் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த 6 வயது சிறுமியை காப்பாற்றியுள்ளன. இந்த நிலையில சிரியாவில் இன்று மிதமான நில அதிர்வு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications