துருக்கியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கைது- அதிபர், மதகுருவின் பனிப்போரின் உச்சம்
அங்காரா: துருக்கியில் பிரதமர் ரிசெப் தய்யிப் எர்டோகன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் அதிரடி ரெய்டுகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த ரெய்டுகளில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதால் துருக்கியில் பரபரப்பு காணப்படுகிறது.
தற்போது பணியில் உள்ள மற்றும் முன்னாள் காவல்துறையினர் பலரும் கொத்துக் கொத்தாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தலைநகரிலும் ரெய்டு:
தலைநகர் அங்காரா, இஸ்தான்புல், இஸ்மில், தியர்பக்கிர் ஆகிய நகரங்களில் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பனிப்போரின் விளைவு:
பிரதமர் எர்டோகனுக்கும், அவரது முன்னாள் உதவியாளரான மதகுரு பதேஹுல்லா குலெனுக்கும் இடையிலான பனிப் போரின் விளைவாக இந்த ரெய்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யயப்பட்டுள்ள பலரும் குலெனின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
ஊழல்கள் பற்றிய செய்திகள்:
பிரதமர் உள்பட அவருக்கு நெருக்கமானவர்கள் செய்து வரும் ஊழல்கள் குறித்து குலென் தனக்கு நெருங்கிய காவல்துறையினர் மூலம் உளவு பார்த்து பல தகவல்களை, ஊழல்களை கசிய விட்டார்.
பெண்களும் உளவாளிகள்:
இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த உளவு பார்க்கும் பணியில் பெண்களும் கூட ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் பிரதமர் எர்டோகன் கோபமடைந்தார்.
வெளியேறிய குலென்:
இதையடுத்து குலென் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தார். ஆனால் குலென் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
மீண்டும் தேர்தல்:
இந்த நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார் எர்டோகன். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக அவர் பிரதமராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
100 பேருக்கு மேல் கைது:
தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர்களில் தலைநகர் அங்காராவில், தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவர்களாக இருந்த உமர் கோஸ், யுர்ட் அடாயுன் ஆகியோரும் அடக்கம். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மதவெறி குற்றசாட்டுகள்:
குலென் 1999 ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். அவர் மீது மதவெறி செயல்பாடுகளில் ஈடுபட்டதாக அப்போதைய அரசு குற்றம் சாட்டியது.