துருக்கி சிறைகளில் இட நெருக்கடி... “கண்டிஷன்” போட்டு 38,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் அரசு!
அங்காரா: இடநெருக்கடி காரணமாக அந்நாட்டு சிறைகளில் இருந்து 38 ஆயிரம் கைதிகளை நிபந்தனையின் பேரில் விடுதலை செய்ய துருக்கி அரசு முடிவு செய்துள்ளது.
மேற்காசிய நாடான துருக்கியில் சமீபத்தில் ராணுவத்தின் ஒரு பிரிவினர் புரட்சிக்கு முயற்சித்தனர். ஆனால், அந்த முயற்சியை நாட்டு மக்களின் உதவியுடன் அதிபர் எர்டோகன் முறியடித்தார்.

அப்போது நடந்த வன்முறை சம்பவங்களில் சுமார் 270 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து ராணுவப் புரட்சிக்கு முயற்சித்ததாக சுமார் 35 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏற்கனவே, குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக ஒரே சமயத்தில் 35 ஆயிரம் பேர் சிறைகளில் அடைக்கப்பட்டதால் அங்கு இடநெருக்கடி ஏற்பட்டது. இதனால், புதிய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது துருக்கி அரசு.
அதாவது 'நன்னடத்தை சான்றிதழ் பெற்றவர்கள், மிக குறைவான ஆண்டு தண்டனை காலம் உள்ளவர்கள்' என, சிறையில் உள்ள மொத்தம் 38 ஆயிரம் கைதிகளை நிபந்தனையுடன் விடுவிக்க துருக்கி அரசு உத்தரவிட்டு உள்ளது.
இப்படி அதிரடியாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்தால் நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுமே என அஞ்சத் தேவையில்லை. காரணம், 'கொலை, உள்நாட்டு கலகம், பாலியல் குற்றங்களை செய்து, சிறை தண்டனை அனுபவித்து வருபவர்களின் பெயர் இந்த விடுதலைப் பட்டியலில் இல்லை' என துருக்கி அரசு அறிவித்துள்ளது.
இந்த தகவல்களை அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் பெக்கிர் போஜ்டாக் உறுதி செய்து, டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "38 ஆயிரம் பேரை சிறைகளில் இருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை, பொது மன்னிப்பும் அளிக்கப்படவில்லை, நிபந்தனையின் பேரில்தான் விடுதலை செய்யப்படுகிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் என்ன நிபந்தனை என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications