அமெரிக்காவில் பயங்கரம்..கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி
லாஸ் ஏஞ்சலஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ்சில் உள்ள புகழ்பெற்ற கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தில் மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் உயிரிழந்தனர்.
லாஸ் ஏஞ்சலஸ்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள பொறியியல் துறை கட்டிடம் அருகே இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அமெரிக்க நேரப்படி காலை 10 மணியளவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது பற்றி லாஸ் ஏஞ்சலஸ் காவல் துறையினருக்கு மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, பல்கலைக் கழக வளாகத்தை சுற்றிவளைத்த லாஸ் ஏஞ்சலஸ் போலீசார் பல்கலைக்கழக வளாகத்தில் தீவிர சோதனை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தினர்.
போலீசாரின் தேடுதல் வேட்டையில் குண்டடிப்பட்ட நிலையில் இருவரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்த இருவரில் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியவராக இருக்கக் கூடும் என போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து லாஸ் ஏஞ்சலஸ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை அடுத்து பல்கலைக் கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது. அருகில் உள்ள பள்ளிக் கூடங்களும் மூடப்பட்டுள்ளன. இச்சம்பவத்தை தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.