சூட்கேஸ் கொலை: யு.எஸ். ஜோடிக்கு சிறை தண்டனை விதித்த இந்தோனேசிய கோர்ட்
பாலி: இந்தோனேசியாவில் தனது காதலியின் தாயை கொலை செய்த அமெரிக்கருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரைச் சேர்ந்தவர் ஷீலா வான் வீஸ் மேக்(62). பணக்காரரான அவரின் மகள் ஹீதர் மேக்கை(19) டாமி ஷேபர் என்பவர் காதலித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் அவர்கள் 3 பேரும் இந்தோனேசியாவுக்கு வந்தனர்.
பாலியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ஷீலாவுக்கு தனது மகள் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிய வந்து கோபம் அடைந்தார். இது குறித்து அவருக்கும் டாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது டாமி ஷீலாவை அடித்துக் கொலை செய்தார்.

இதையடுத்து டாமியும், ஹீதரும் சேர்ந்து ஷீலாவின் உடலை சூட்கேஸில் வைத்து டாக்ஸியில் எடுத்துச் சென்றனர். டாக்ஸியில் இருந்த பெட்டியை அவர்கள் எடுக்காமல் சென்றதால் இது குறித்து டிரைவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். அவர்கள் வந்து சூட்கேஸை திறந்து பார்த்தபோது ஷீலாவின் பிரேதம் இருந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹீதர் மற்றும் டாமியை தேடிக் கண்டுபிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு இந்தோனேசியாவில் நடந்து வந்தது. இதற்கிடையே கர்ப்பிணியான ஹீதர் அண்மையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டாமிக்கு(21) 18 ஆண்டுகளும், ஹீதருக்கு 10 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications