வாந்தியால் லட்சாதிபதியானவரை பார்த்திருக்கிறீர்களா?: அது இவர் தான்
லண்டன்: இங்கிலாந்தில் நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லும் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர் நாய்களை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லும் வேலை செய்து வருகிறார். அவர் கடந்த வாரம் நாய்களை அழைத்துக் கொண்டு வடக்கு வேல்ஸில் உள்ள ஆங்க்லெசி தீவில் நடைபயிற்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது கரையோரம் திமிங்கலம் ஒன்று எடுத்திருந்த வாந்தி கிடந்ததை அவர் பார்த்தார். 1.1 கிலோ எடையுள்ள ஆம்பர்கிஸ் என்ற அந்த வாந்தியை அவர் எடுத்துச் சென்று ஏலம் விடும் நிறுவனத்திடம் அளித்தார். ஆம்பர்கிஸ் வாசனை திரவிய தயாரிப்பில் பெரிதும் உதவியாக உள்ளது. அது திரவியத்தின் வாசனையை அதிகரிப்பதுடன் அந்த வாசனை நீண்ட நேரம் இருக்க உதவுகிறது.
இந்நிலையில் வடக்கு இங்கிலாந்தில் உள்ள ஏல நிறுவனத்தில் திமிங்கலத்தின் வாந்தி ஏலத்தில் விடப்பட்டது அதை டெலிபோன் மூலம் ஒருவரும், இன்டர்நெட் மூலம் ஒருவரும் ஏலத்தில் எடுக்க போட்டி போட்டனர். இறுதியில் டெலிபோன் மூலம் ஏலத்தில் கேட்டவர் வெற்றி பெற்றார். அவர் பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
திமிங்கலத்தின் வாந்தி ரூ.11 லட்சத்து 4 ஆயிரத்திற்கு ஏலத்தில் சென்றுள்ளது. திமிங்கலத்தின் வயிற்றில் உருவாகும் ஆம்பர்கிஸ் வாந்தியாகவோ அல்லது வேறு விதமாகவோ வெளியே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications