கிரீமியா பிரிவினைக்குப் பிறகு ரஷ்யா, உக்ரைன் அதிபர்கள் முதல் முறையாக சந்திப்பு!
மின்ஸ்க்: உக்ரைனில் இருந்து கிரீமியா பிரிந்து சென்று ரஷ்யாவுடன் இணைந்த பின்னர் முதல் முறையாக ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்கள் பெலாரஸ் நாட்டின் மின்ஸ்க்கில் சந்தித்து பேசினர்.
உக்ரைனின் தன்னாட்சி பகுதியாக இருந்து வந்த கிரிமியா பொது வாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைந்து கொணடது. கிரிமியா போன்று கிழக்கு உக்ரைனும் சேர விரும்புகிறது, ஆனால் இதற்கு உக்ரைன் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
இதனால் கிழக்கு பகுதியில் உள்ள ரஷ்யா ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் உக்ரைன் அரசு படைகளுடன் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலில் டுனெக்ஸ்ட் மற்றும் லுகான்ஸ்க் மாகாணங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கிழக்கு உக்ரைனில் பாதிக்கபட்ட மக்களுக்கு ரஷ்யா நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தது. இதற்கு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன இதை தொடர்ந்து நிவாரணப்பொருடகள் வாகனம் ரஷ்யா திரும்பியது.
மேலும் 10 ரஷ்யா வீரர்களை கிழக்கு உக்ரைன் பகுதியில் இருந்து உக்ரைன் சிறைபிடித்தும் வைத்துள்ளது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பெலாரஸ் நாட்டுக்கு ரஷ்யா அதிபர் புதின் சென்றிருந்தார். அங்கு வந்த உக்ரைன் அதிபர் பெட்ரோ போரோ சென்கோவுடன் புதின் கை குலுக்கி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சு வார்த்தை 2 மணி நேரம் நீடித்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர், இந்த பாதை ஒரு நல்ல நோக்கத்தை சென்றடையும் என்ற நம்பிக்கை உள்ளது. இரு தரப்பும் முற்றிலும் ஏற்று கொள்ள கூடியதாக போர் நிறுத்தம் இருக்க வேண்டும் என்றார்.
கடந்த ஜூன் மாதம் கிரீமியா பிரிந்த பின்னர் இருநாட்டு தலைவர்களும் நேரடியாக சந்தித்து பேசியிருப்பதன் மூலம் அப்பிராந்தியத்தில் பதற்றம் குறைய வாய்ப்பிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.