முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? புதினின் 'திடீர்' அந்தர்பல்டி! சம்பந்தமே இல்லாமல் உள்ளே வரும் டிரம்ப்
மாஸ்கோ: பல ஆண்டுகளாக நீடித்து வந்த உக்ரைன் ரஷ்யா போர் ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. நான்கு ஆண்டுகளைக் கடந்த உக்ரைன் போர், எப்போது முடிவுக்கு வரும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. இதற்கிடையே இந்த போர் சீக்கிரம் முடிவுக்கு வரும் என்பது போல சிக்னல் கொடுத்திருக்கிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்கிறது. உக்ரைன் முதலில் இந்த போரில் சீக்கிரமே தோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியால் ரஷ்யாவுக்கு எதிராகத் தொடர்ந்து போரிட்டு வந்தது.

நேற்று மே 9ம் தேதி நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் மாஸ்கோவின் செஞ்சதுக்கம் வழக்கமான ராணுவ பலத்தைக் காட்டவில்லை. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அதிநவீன டாங்கிகள் என நிஜ தளவாடங்களுக்குப் பதில், இம்முறை ராட்சத திரைகளில் ஓடிய வீடியோக்களே வெற்றியை முழங்கின. ஆனால், அணிவகுப்பை விடப் புதின் செய்தியாளர்களிடம் சொன்ன அந்த ஒரு வரிதான் இன்றைய முக்கியமான செய்தி!
அவர் இது தொடர்பாகக் கூறுகையில், "விஷயம் (உக்ரைன் போர்) ஒரு முடிவுக்கு வருவதாக நான் நினைக்கிறேன்.." என்றார். சில மணி நேரங்களுக்கு முன்புதான் உக்ரைனில் வெற்றி நிச்சயம் என்று வீராவேசம் பேசியவர், இப்போது சமாதான பாதைக்குத் திரும்பியிருப்பது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐரோப்பாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பேசத் தயார் என்று சொல்லியுள்ள புதின், அதற்குத் தனது விருப்பமான பேச்சுவார்த்தைத் துணையாக ஜெர்மனியின் முன்னாள் சான்சலர் ஜெர்ஹார்ட் ஷ்ரோடரைக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு தற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்படுத்தியுள்ளார். சனிக்கிழமை முதல் திங்கள் வரை அமலில் இருக்கும் இந்த 3 நாள் போர்நிறுத்தத்தின் போது, இரு நாடுகளும் தலா 500 கைதிகள் என மொத்தம் 1,000 கைதிகளைப் பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன.
உக்ரைன் போரை நிறுத்துவதில் கடந்த ஓராண்டாகவே டிரம்ப் தீவிரமாக இருக்கிறார். இது தொடர்பாக டிரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார். சமீபத்தில் கூட அவர், "மாதம் 25,000 இளம் வீரர்கள் பலியாவது பைத்தியக்காரத்தனம்.. இதை நிறுத்த வேண்டும்" என்று ட்ரம்ப் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். இந்த 3 நாள் 'பிரேக்' ஒரு நீண்ட கால அமைதிக்கு வித்திடுமா என்பதுதான் இப்போதைய கேள்வி.
இரண்டாம் உலகப் போரை விட நீண்ட காலமாக (4+ ஆண்டுகள்) நீடிக்கும் இந்தப் போர், 3 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான ரஷ்யப் பொருளாதாரத்தைப் பதம் பார்த்துள்ளது. உக்ரைனின் சுமார் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஒட்டுமொத்த டான்பாஸ் பிராந்தியத்தைக் கைப்பற்ற முடியாமல் ரஷ்யப் படைகள் திணறி வருகின்றன.
இந்தச் சூழலில் தான் போரை முடிவுக்குக் கொண்டு வர ரெடி என்பது போல புதின் சிக்னல் கொடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போரால் உண்மையில், அந்த இரு நாடுகளை தாண்டியும் சர்வதேச அளவில் பாதிப்புகள் கடுமையாக உள்ளது. உக்ரைனில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் சூரியகாந்தி எண்ணெய் தொடங்கி எல்லாமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போர் முடிவுக்கு வந்தால் தான் நிலைமை மெல்லச் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications