எங்களின் வான் வெளி தாக்குதலால் ஐஎஸ்ஐஸ் தீவிரவாதிகளை முடக்க முடியாது: அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்கா நடத்திய வான் வெளி தாக்குதலால் ஈராக்கில் முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் குறைந்துள்ளது. ஆனால் அவர்களை முடக்கிப்போட முடியாது என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் வில்லியம் மெவில் கூறுகையில்,
ஈராக்கில் விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதை விரிவுபடுத்தும் திட்டம் அமெரிக்காவிடம் இல்லை. வடக்கு ஈராக்கில் உள்ள சிஞ்சார் மலைப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளவர்களுக்கு உதவி செய்யவும், எர்பில் பகுதியில் உள்ள அமெரிக்கர்களை பாதுகாக்க வான் வெளி தாக்குதல் நடத்தவும் அதிபர் ஒபாமா உத்தரவிட்டார். இதையடுத்து அமெரிக்க விமானப்படை மற்றும் கடற்படை விமானங்கள் 15 முறை தாக்குதல் நடத்தியுள்ளன.

அமெரிக்காவின் தாக்குதல்களால் ஐஎஸ்ஐஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் குறைந்துள்ளன. ஆனால் இது நிரந்தரம் இல்லை. எர்பில், மேவில் ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகளின் வேகம் குறைந்துள்ளது. ஆனால் அவர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள பிற பகுதிகளில் செயல்படுவதை தடுக்க முடியாது.
ஈராக்கில் மேலும் பல பகுதிகளை கைப்பற்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் குர்திஷ் பாதுகாப்பு படை, யசிதி மக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவார்கள். கடந்த 7ம் தேதி முதல் அமெரிக்காவும், இங்கிலாந்தும் சிஞ்சார் மலையில் உள்ள யசிதி மக்களுக்கு விமானம் மூலம் 14 முறை உணவும், நீரும், மருந்தும் வழங்கியுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications