தீவிரவாதம்: பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க குடிமகனை கொல்ல யு.எஸ். ஆலோசனை
வாஷிங்டன்: பாகிஸ்தானில் இருந்து கொண்டு அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் அமெரிக்க குடிமகனை ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொல்ல ஒபாமா அரசு ஆலோசித்து வருகிறது.
வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்க குடிமகன் ஒருவர் அல் கொய்தா அமைப்புடன் சேர்ந்து கொண்டு தனது சொந்த நாட்டுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நபர் பாகிஸ்தானில் வசித்து வருவதாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ராணுவ நடவடிக்கையை அனுமதிக்காத நாட்டில் இருந்து கொண்டு தாய்நாட்டுக்கு எதிராக செயல்படும் அந்த அமெரிக்க குடிமகன் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடித்த அமெரிக்க அரசு ஆலோசித்து வருகிறது.
அந்த நபர் யார், அவர் எங்கு இருக்கிறார் என்பதை ரகசியமாக வைத்துள்ளார்கள். அதை தெரிவித்தால் ஏற்கனவே அல் கொய்தா பாதுகாப்பில் இருக்கும் அவர் யாராலும் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் பதுங்கிவிடுவார் என்று கருதப்படுகிறது.
அந்த நபர் வெளிநாடுகளில் வசிக்கும் அமெரிக்க குடிமகன்களுக்கு எதிரான தாக்குதலுக்கு நேரடி காரணமாக உள்ளாராம். மேலும் அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடத்த தொடர்ந்து திட்டமிட்டு வருகிறாராம்.