கர்ப்பத்தில் இருக்கும் 25 வார சிசுவுக்கு இருதய ஆபரேஷன் செய்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை
நியூயார்க்: கர்ப்பத்தில் இருக்கும் 25 வாரக் கருவிற்கு இருதய ஆபரேஷன் செய்து சாதனை படைத்துள்ளனர் அமெரிக்க மருத்துவர்கள்.
அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வாழும் கர்ப்பிணி பெண் ஒருவரை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் வளர்ந்த 25 வார கருக்குழந்தைக்கு இருதயத்தில் பெருந்தமணி ரத்தக்குழாய் வால்வில் அடைப்பு இருந்ததைக் கண்டறிந்தனர்.
இருதய தமணி அடைப்பு காரணமாக எதிர்காலத்தில், அதாவது அக்குழந்தை பிறந்த பிறகு மூச்சுதிணறல் உள்ளிட்ட இருதய நோயினால் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும் எனவும், பின்னாளில் உயிருக்கே ஆபத்து விளையும் சூழ்நிலையும் இருந்ததை உணர்ந்த மருத்துவர்கள் என்ன செய்யலாம் என ஆலோசித்தனர்.
பின்னர், தாயின் வயிற்றுக்குள் கருப்பையில் வளரும் போதே குழந்தைக்கு இருதய ஆபரேசன் நடத்துவதே குழந்தையைக் காக்க சரியான வழி என அவர்கள் முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண் அனுமதிக்கப்பட்டார்.
வயிற்றில் வளரும் கருக்குழந்தைக்கு மிக மயிரிழையால் ஆன வயர் மற்றும் மிக மெல்லிய ஊசி போன்றவற்றின் மூலம் துல்லியமாக ஆபரேசன் நடத்தப்பட்டது. தற்போது தாயும், அவரது வயிற்றில் இருக்கும் கருவும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பிறந்த குழந்தைகளுக்கே ஆபரேஷன் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் நிலவும் சூழலில், கருவில் இருந்த குழந்தைக்கு மருத்துவர்கள் ஆபரேஷன் செய்துள்ளது அறிவியலின் துணை கொண்டு நிகழ்த்தப்பட்ட சாதனை என்றே கூறலாம்.












Click it and Unblock the Notifications