அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தீவு "குவாம்".. கொத்துக் கறி போடுமா வட கொரியா??
குவாம் தீவு: அமெரிக்காவை அடிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும், குவாம் தீவை நாங்கள் தாக்கப் போகிறோம் என்று பகிரங்கமாக கூறியுள்ளது வட கொரியா. முடிந்தால் தொட்டுப் பார், பிரித்து துவைத்து விடுவோம் என்று அமெரிக்கா பதில் சவால் விட்டுள்ளது. இவர்களின் வாய்ச் சவாடலைப் பார்த்து பலருக்கும் "அது என்னப்பா குவாம் தீவு.. எனக்கே பார்க்கனும் போல இருக்கு" என்று ஆர்வம் பிறந்து விட்டது.
மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுதான் குவாம். தற்போது இது அமெரிக்காவின் வசம் உள்ளது. இது அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட பூமி. 1898ம் ஆண்டு நடந்த ஸ்பானிஷ் - அமெரிக்க போரின்போது ஸ்பெயின் வசம் இருந்த குவாம் தீவை பிடித்து தன் வசமாக்கி இங்கு தனது இருப்பை நிலை நிறுத்தியது அமெரிக்கா.
550 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது குவாம் தீவு. இங்கு மொத்தமாக 1.60 லட்சம் மக்கள்தான் வசிக்கிறார்கள். சிட்னியின் வடக்கிலிருந்து 5300 கிலோமீட்டர் தொலைவிலும், அமெரிக்காவின் ஹவாயிலிருந்து அதே அளவிலான தூரத்திலும் உள்ளது. வட கொரியாவிலிருந்து 3400 கிலோமீட்டர் தொலைவில் குவாம் உள்ளது.

சமோரா - பிலிப்பினோ
குவாம் தீவு மக்கள் அனைவரும் பிறப்பால் அமெரிக்க குடிமக்கள் ஆவர். சமோரா இனத்தவர்தான் இந்த தீவின் பூர்வ குடி மக்கள். இவர்கள்தான் மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள்தான் இந்தத் தீவின் மிகப் பெரிய இனக்குழுவும் கூட. இவர்கள் தவிர பிலிப்பினோ இனத்தவரும் கணிசமாக உள்ளனர்.

அமெரிக்க படைத்தளம்
குவாம் தீவில் அமெரிக்கா தனது படைத்தளத்தை வைத்துள்ளது. அங்கு தற்போது 7000 அமெரிக்கத் துருப்புகள் உள்ளன. குவாம் தீவின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தை தனது படைத்தளத்துக்காக பயன்படுத்தி வருகிறது அமெரிக்கா. இங்குள்ள படையினரில் பெரும்பாலானவர்கள் விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

குண்டு வீச்சு விமானங்கள்
இங்குள்ள ஆண்டர்சன் விமானப்படைத் தளத்தில் பி52 ரக போர் விமானங்களும், இதர போர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல கடற்படை முகாமில் அதி நவீன அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல் உள்ளிட்ட 3 நீர்மூழ்கிக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஏவுகணைத் தடுப்புக் கவசம்
குவாம் தீவை ஏவுகணைத் தாக்குதலிலிருந்து காக்கும் கவசத் திட்டத்தின் கீழ் 2013ல் அமெரிக்கா கொண்டு வந்தது. அதன் படி வெளியிலிருந்து எந்த ஏவுகணை குவாம் தீவை நெருங்கினாலும் அதை வானிலேயே தடுத்து அழித்து விடும் வகையில் தனது பாதுகாப்புக் கவசத்தை பலமாகவே வைத்துள்ளது அமெரிக்கா.

3 நாடுகளிடம் சிக்கி
குவாம் தீவின் வரலாறு சற்றே பரிதாபகரமானது. இந்தத் தீவில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு சமோரா இனத்தவர் குடியேறி வசிக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு ஸ்பெயின், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கையில் சிக்கி இந்த தீவு அடிமையாகவே இருந்து வருகிறது. 1898ம் ஆணடு வரை இது ஸ்பெயின் வசம் இருந்தது. பின்னர் அமெரிக்கா இதை அடிமைப்படுத்தியது. பின்னர் 1941ல் ஜப்பான் ஊடுருவியது. பிறகு 1944ல் மீண்டும் அமெரிக்காவின் வசம் வந்தது. அன்று முதல் அமெரிக்காவே இதை வைத்துள்ளது.
அழகிய தீவான குவாம் இன்று போர்க் குரல்களுக்கு மத்தியில் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் செல்லக் குழந்தையாகவே இருந்தாலும் கூட "குழந்தைசாமி"யின் போர்க்குரல், குவாமுக்கு பதட்டத்தையே கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications