அமெரிக்காவில் 13 மாதங்களில் 3 மகன்களை கொலை செய்த தாய்: காரணம் பாசம்
சிகாகோ: அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 13 மாதங்களில் தனது மூன்று மகன்களை கொலை செய்துள்ளார்.
அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் உள்ள லோகன் கவுன்ட்டியைச் சேர்ந்தவர் ஜோசப் பில்கிங்டன். அவரது மனைவி பிரிட்டனி. அவர்களுக்கு 3 மகன்கள், 4 வயதில் ஒரு மகள் உள்ளார். பிரிட்டனிக்கு தனது கணவர் மகன்கள் மீது அதிக அன்பு செலுத்துவதாக தோன்றியது. கணவர் மகள் ஹெய்லியை கவனிக்காமல் மகன்கள் மீது பாசமாக இருப்பதாக நினைத்த அவருக்கு மகன்கள் மீது கோபம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி தனது 4 வயது மகன் கவினின் முகத்தில் போர்வையை போர்த்தி மூச்சை நிறுத்தி கொலை செய்தார். ஆனால் போலீசாருக்கு போன் செய்து தனது மகன் மூச்சுவிடாமல் கிடப்பதாக தெரிவித்தார்.
சிறுவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக கருதப்பட்டது. இருப்பினும் போலீசார் சிறுவனின் மரணம் பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரின் மூன்று மாத மகன் நியால் இறந்து கிடந்ததை ஜோசப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து போலீசாருக்கு பிரிட்டனி மீது சந்தேகம் ஏற்பட்டது. கவின் மரணம் குறித்து விசாரித்து வந்த போலீசார் நோவா மற்றும் ஹெய்லியை வீட்டில் இருந்து அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி குழந்தைகளை தாயிடம் ஒப்படைக்குமாறு கடந்த வாரம் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 3 மணிக்கு பிரிட்டனி போலீசாரை அழைத்து தனது 3 மாத ஆண் குழந்தை நோவா மூச்சுவிடாமல் இருப்பதாக தெரிவித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பிரிட்டனியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மகளை பாதுகாக்க 3 மகன்களை கொலை செய்ததை பிரிட்டனி ஒப்புக் கொண்டார்.