டிரம்ப் செய்த காரியம்! வங்கதேசத்தில் சைலண்டாக கால் பதிக்கும் அமெரிக்கா! உற்று கவனிக்கும் இந்தியா!
டாக்கா: வங்கதேசத்தில் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததில் இருந்தே அங்குத் திடீரென அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இப்போது கூட சுமார் 120 அமெரிக்க வீரர்கள் அங்குப் பயிற்சிக்காக வந்துள்ளனர். இதுபோல அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகள் திடீரென வங்கதேசத்தில் அதிகரித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் சில ஆண்டுகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வருகிறது. அங்கு ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது, அவர் வங்கதேசத்தில் இருந்தே வெளியேறும் சூழலுக்குத் தள்ளப்பட்டார். அதன் பிறகு யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. ஆனால், யூனுஸ் தலைமையிலான அரசு வந்த பிறகு அங்கு அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் திட்டம்
இதற்கிடையே இது தொடர்பாகச் சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது வங்காள விரிகுடா பிராந்தியத்தில் தனது இருப்பை நிலைநிறுத்தும் நோக்கில், அமெரிக்கா வங்கதேசத்தில் ஒரு துறைமுகத்தையே கட்ட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. இந்தப் பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்தும் வகையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா இந்தத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. அதேநேரம் இது இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலேயே இருக்கிறது.
இந்தத் துறைமுகத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த இந்த வாரத் தொடக்கத்தில் டாக்கா சென்ற அமெரிக்க அதிகாரிகள், அங்கு வங்கதேச அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். விரைவில் இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை முடித்து, கட்டுமானத்தை ஆரம்பிக்கும் திட்டத்தில் அமெரிக்கா இருக்கிறது. ஏற்கனவே வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் (Chittagong) பகுதியில் அமெரிக்க ராணுவம் செயல்பட்டு வரும் நிலையில், முழுமையாக ஒரு துறைமுகத்தை அமைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. இந்தப் பிராந்தியத்திற்கு அமெரிக்கா எந்தளவுக்கு கனம் செலுத்துகிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சியாக இருக்கிறது.
உள்ளே வந்த அமெரிக்க ராணுவம்
மேலும், அமெரிக்க ராணுவத்தினர் வங்கதேச ராணுவத்துடன் கூட்டு ராணுவ போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். சமீப காலங்களாக இதுபோன்ற போர் பயிற்சிகளை அமெரிக்கா அதிகரித்துள்ளது. சமீபத்தில் கூட அமெரிக்க ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த சுமார் 120 அதிகாரிகள் சட்டோகிராமின் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு சத்தமே இல்லாமல் வந்துள்ளனர். அங்குத் தங்கியபடி வங்கதேசப் படைகளுடன் கூட்டுப் பயிற்சியிலும் ஈடுபட்டனர்.
ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்த வரை அமெரிக்க ராணுவம் பெரியளவில் வங்கதேசத்திற்குள் வரவில்லை. ஆனால், ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு, வங்கதேசத்தில் அமெரிக்க ராணுவத்தின் செயல்பாடுகள் கணிசமாகவே அதிகரித்துள்ளன. இது இந்திய உளவுத்துறை வட்டாரங்களிலும் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
போர் பயிற்சி
முன்பு குறிப்பிட்ட போர்ப் பயிற்சிக்காகப் பல அமெரிக்க வீரர்கள் டாக்கா வந்திறங்கினர். அவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 85 அறைகளை முன்பதிவு செய்திருந்தனர். இருப்பினும், ஹோட்டல் விருந்தினர் பதிவேட்டில் ஒரு அமெரிக்க அதிகாரியின் பெயர் கூட இல்லையாம். இந்த வீரர்கள் பிறகு வங்கதேச விமானப்படையின் படெங்கா விமானத்தளத்திற்குச் சென்றுள்ளனர். அவர்கள் இந்த வாரம் முழுக்க வங்கதேசத்திலேயே தங்கி இருப்பார்களாம். அதன் பிறகு இந்த வார இறுதியில் தான் நகரிலிருந்து புறப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் திட்டம்
இது ஒரு பக்கம் இருக்க இந்தியாவும் கூட வங்கதேசத்தில் பிபிபி எனப்படும் பப்ளிக்- பிரைவேட் கூட்டாண்மையில் ஒரு துறைமுகத்தை அமைக்க பரிசீலனை செய்து வருகிறதாம். முன்னதாக ஹசீனா ஆட்சியில் இருந்தபோது, 2024இல் வங்கதேசத்தின் மோங்லா துறைமுகத்தில் ஒரு முனையத்தின் செயல்பாட்டு உரிமைகளை இந்தியா பெற்றிருந்தது. மேலும், 2018இல் சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களைச் சரக்குப் போக்குவரத்து மற்றும் தளவாடங்களுக்குப் பயன்படுத்த இந்தியாவுக்கு வங்கதேசம் முழு அனுமதியைக் கொடுத்திருந்தது.
வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, யூனுஸ் அரசு அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இதனால் இந்தியா உடனான இந்த ஒப்பந்தங்களைத் தொடருமா அல்லது மறுபரிசீலனை செய்யுமா என்பதையே இப்போது பல்வேறு தரப்பினரும் உற்றுக் கவனித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications