ஈரானிடம் மண்டியிட்ட டிரம்ப்.. கச்சா எண்ணெய் தடையை நீக்க அமெரிக்கா முடிவு.. இந்தியாவிற்கு ஜாக்பாட்?
டெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் பதற்றத்தை தணித்து பேச்சுவார்த்தையை முன்னெடுக்க ஈரானின் கச்சா எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அமலுக்கு வரும் பட்சத்தில் ஈரானால் இனி கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்ய முடியும். இதன்மூலம் நம் நாட்டுக்கு எப்படி பலன் கிடைக்கும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து போரை தொடங்கியது. பிப்ரவரி 28 ம் தேதி தொடங்கியது. இந்த போருக்கு முக்கிய காரணம் என்பது ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுப்பது தான். ஒரு மாதத்துக்கு மேலாக நடந்த கடந்த மாதம் 7 ம் தேதி முடிவுக்கு வந்தது.

அமெரிக்கா -ஈரான் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் நடந்த இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அதன்பிறகு தொடர்ந்து அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராகி வந்தாலும் கூட ஈரான் மறுப்பு தெரிவித்து வருகிறது.
தடைகளை நீக்க ஒப்புதல்
இதற்கிடையே தான் ஈரான் மீது அடுத்தக்கட்ட தாக்குதலை தொடங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் மீண்டும் போர் அச்சம் ஏற்பட்டது. இதற்கிடையே தான் தற்போது ஈரான் மீதான தாக்குதலை டிரம்ப் தள்ளிவைத்து ஈரானை எப்படியாவது பேச்சுவார்த்தை மேஜைக்கு கொண்டு வரும் முயற்சியில் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அதன்படி அமெரிக்கா - ஈரான் இடையேயான புதிய பேச்சுவார்த்தைக்காக ஈரானின் கச்சா எண்ணெய் துறை மீதான பொருளாதார தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தற்காலிகமாக நீக்கப்பட வாய்ப்பு
இதனை ஈரானின் செய்தி நிறுவனம் Tasnim உறுதி செய்துள்ளது. அதில், ''ஈரானின் எண்ணெய் துறை மீதான தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. இந்த புதிய வரைவு முன்மொழிவு, முந்தைய அனைத்து அமெரிக்க திட்டங்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டது'' என கூறியுள்ளது. இதுபற்றி நிபுணர்கள் கூறுகையில், ''அமெரிக்கா இதுபோன்ற தடைகளை நீக்குவது என்பது தற்காலிகமானது தான். இரு நாடுகளும் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு வழிவகுக்கும் ஒரு நேர்மறையான சூழலை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்'' னெ கூறியுள்ளனர்.
தடையை நிறுத்தும் ஓஎஃப்ஏசி
அதேபோல் அமெரிக்கா மற்றொரு முக்கிய யோசனையையும் முன்வைத்துள்ளது. ஓஎஃப்ஏசி (Office of Foreign Assets Control - வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகம்) தடைகளையும் இரு நாடுகளுக்கும் இடையே இறுதி ஒப்பந்தம் அல்லது ஒருமித்த கருத்து எட்டும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது. இந்த ஓஎஃப்ஏசி என்பது அமெரிக்க கருவூலத் துறையின் ஒரு பகுதியக செயல்பட்டு வருகிறது. இதுதான் சர்வதேச அளவில் அமெரிக்காவின் பல்வேறு தடைகளை அமல்படுத்தும் பணியை மேற்கொள்கிறது.
தற்போது கூறியது போல் அமெரிக்கா, ஈரானின் கச்சா எண்ணெய் துறை மீதான தடையை நீக்கினால் அந்தாடு கச்சா எண்ணெய் சந்தையில் வர்த்தகம் செய்வது மிகவும் எளிமையாக இருக்கும். இதன்மூலம் ஈரான் தனது நட்பு நாடுகளுக்கு கச்சா எண்ணெய்களை வழங்கும்.
ஈரான் - இந்தியா ஆயில் வர்த்தகம் எவ்வளவு?
அந்த வகையில் இந்தியாவுக்கு கூட பெரிய பலன் கிடைக்கலாம். ஏனென்றால் நம் நாட்டுக்கும், ஈரானுக்கும் இடையே நல்ல உறவு தொடர்ந்து வருகிறது. இதற்கு முன்பு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வந்தது. இன்னும் சொல்லப்போனால் ஈரானின் கச்சா எண்ணெய் வாடிக்கையாளர்களில் இந்தியா மிகவும் முக்கியமான நாடாக இருந்தது.
2018ல் ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகம் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இதையடுத்து 2019 மே மாதம் முதல் ஈரானிடம் இருந்து நம் நாடு கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. அந்த சமயத்தில் நம் நாட்டின் தேவையில் 11.5 சதவீத கச்சா எண்ணெயை ஈரான் வழங்கி வந்தது.
பணமாக நடந்த வர்த்தகம்
அதோடு இந்த கச்சா எண்ணெய் வர்த்தக கட்டணம் ரூபாயில் பரிமாற்றம் செய்யப்பட்டது. மொத்த கச்சா எண்ணெயில் 45 சதவீதம் பணமாக ஈரானுக்கு வழங்கப்பட்டது. மீதமுள் 55 சதவீதத்தை பணமாக வாங்காமல் அதற்கு ஏற்ப நம் நாட்டிடம் இருந்து அரிசி, சர்க்கரை, மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை ஈரான் பெற்று கொண்டது. இது ஈரானுக்கும், நம் நாட்டுக்கும் பெரிய அளவில் கைக்கொடுத்தது. அதுமட்டுமின்றி ஈரானில் இருந்து நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்கு பிற நாடுகளை ஒப்பிடும்போது குறைந்த செலவு தான் ஆகும். இதனால் நம் நாடு பலன் பெற்றது.
பிறகு 2019ல் ஈரான் உடனான கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மீது அமெரிக்கா தடை விதித்தது. இதனால் நம் நாடு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. ஈரானுக்கு பதில் ஈராக், சவுதி அரேபியா உள்பட பிற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயை கூடுதலாக இறக்குமதி செய்ய தொடங்கியது. அதன்பிறகு ரஷ்யா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்ததால் அந்த நாட்டிடமும் நம் நாடு அதிகளவில் வாங்க தொடங்கியது. இருப்பினும் கூட ஈரானும், நம் நாடும் தொடர்ந்து நட்பு பாராட்டி வருகிறது. இந்நிலையில் தான் தற்போது ஈரான் மீதான கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மீதான தடையை அமெரிக்கா தளர்த்தினால் அதன்மூலம் நம் நாட்டுக்கு அதிக பயன் கிடைக்க வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications