போர் பதற்றம்.. இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு "சப்போர்ட்.." நேதான்யுகுவிடம் பேசி உறுதி அளித்த ஜோ பைடன்
வாஷிங்டன்: இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலை முன்னெடுத்த நிலையில், பதிலுக்கு இஸ்ரேலும் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்கா முழு ஆதரவை இஸ்ரேலுக்கு அளிப்பதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் உள்ள பாலஸ்தீனத்தில் இருந்து கடந்த 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக உருவானது. அப்போது முதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறது. காசா தன்னாட்சி பெற்ற பகுதியாக உள்ளது. இங்கு ஹமாஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது.

இந்த ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக ஆயுத மோதல் நீடித்து வருகிறது. இதனால், இரு தரப்பிலும் உயிர்சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் நேற்று அந்நாட்டு நேரப்படி காலை 6.30 மணிக்கு இஸ்ரேல் நாட்டை நோக்கி பாலஸ்தீன் ஹமாஸ் மிக மோசமான தாக்குதலை ஆரம்பித்தது.
இஸ்ரேல் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் இன்று காலை ஏவுகணை தாக்குதலை ஹமாஸ் படைகள் நடத்தியுள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நகருக்குள் நுழைந்தது மட்டும் இன்றி கண்ணில் பட்ட பொதுமக்களையெல்லாம் சுட்டுக் கொலை செய்வது போன்ற காட்சிகள் வெளியாகி பதை பதைக்க வைத்தது. இதற்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கி உள்ளது.
இஸ்ரேலில் இருந்து ராணுவ போர் விமானங்களின் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் உள்ள இடங்களில் தாக்குதலை தொடர்ந்துள்ளனர். இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசா பகுதியில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் பலியானதாகவும் 1,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதேவேளையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 40 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும், 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் இஸ்ரேலில் உச்ச கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகூவை தொலைபேசியில் அழைத்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்று தனது முழு ஆதரவை அளித்தார்.
மேலும், இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துக்கொள்ள அனைத்து உரிமையும் இருப்பதாகவும் கூறிய ஜோ பைடன், பயங்கரவாத தாக்குதலை ஒருபோதும் தனது நிர்வாகம் நியாயப்படுத்தாது என்று உறுதி அளித்தார். இஸ்ரேலுக்கு உறுதியான ஆதரவை அமெரிக்கா வழங்கும் என்று கூறினார். அமெரிக்கா அளித்துள்ள ஆதரவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நன்றியும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications