கடத்தல் மன்னன் சுபாஷ் கடத்திய ரூ.645 கோடி கலைபொருட்களை அந்தந்த நாடுகளிடம் ஒப்படைக்கும் அமெரிக்கா!
நியூயார்க்: சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால் கடத்தி வரப்பட்ட ரூ.645 கோடி மதிப்புள்ள சிலைகள் மற்றும் பழங்கால கலை பொருட்களை சம்பந்தப்பட்ட நாடுகளிடம் ஒப்படைக்க அமெரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுபாஷ் கபூர். தொழில் அதிபரான அவர் மான்ஹட்டன் நகரில் பழங்கால கலைப் பொருட்களை விற்பனை செய்து வந்தார். அவர் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் இருந்து சிலைகள் மற்றும் பழங்கால கலை பொருட்களை கடத்தி விற்பனை செய்து வந்தார்.

இது குறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு ஜெர்மனியில் கைது செய்யப்பட்ட அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டு சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் உள்ள அவரது நிறுவனங்களில் சோதனை நடத்திய போலீசார் அவர் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரத்து 622 கடத்தல் கலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.645 கோடி ஆகும்.
கல், வெண்கலம் ஆகியவற்றால் செய்யப்பட்ட கோவில் சிலைகள், கலைப் பொருட்கள் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், கம்போடியா, இந்தோனேசியா, நேபாளம், திபெத் ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டன. கடத்தப்பட்ட பொருட்களை அந்தந்த நாடுகளிடம் ஒப்படைக்க அமெரிக்க அரசு வழக்கறிஞர்கள் மான்ஹட்டன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் சுபாஷ் கபூரிடம் இருந்து வாங்கிய பொருட்களை பல அருங்காட்சியகங்கள் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்திடம் அளித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications